இந்தியாவுக்காக ஒன்றாக இணைந்து போராடுவோம்..!! ராகுல் காந்தி கருத்து..!!
Nitish Kumar meets Rahul Gandhi for alliance
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசி உள்ளார்.
இந்த சந்திப்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பீகார் முதல்வரும் ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி "எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இது. எதிர்க்கட்சிகளின் தொலைநோக்கு பார்வையுடன் முன்னேற வேண்டும்.
நாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம் என்ற கொள்கை ரீதியான போரில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்தியா மீதான தாக்குதலை ஒற்றுமையுடன் எதிர்த்து போராடுவோம்" என பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் "எங்களால் முடிந்தவரை பல கட்சிகளை ஒன்றிணைத்து செயல்பட முயற்சிப்போம்” என தெரிவித்தார்.
மேலும் இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்த சித்தாந்தப் போரில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நோக்கி இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாக நின்று போராடுவோம் - இந்தியாவுக்காக!" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Nitish Kumar meets Rahul Gandhi for alliance