பள்ளி வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்! 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை...! - கட்டுமான தொழிலாளி போக்சோவில் கைது
Shocking incident school premises 9 year old girl subjected harassment Construction worker arrested under POCSO Act
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளி வளாகத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், வெளிமாவட்ட தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி, கழிவறைக்கு செல்லும் போது, அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த காடல்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கருமுருகன் (25) என்பவர், சிறுமியை வழிமறித்து கையை பிடித்து இழுத்ததாகவும், தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கொடூரச் செயலில் அதிர்ச்சியடைந்த மாணவி, அவனது பிடியில் இருந்து தப்பித்து ஓடி, பள்ளி தலைமை ஆசிரியையிடம் நடந்ததை கூறி கதறி அழுதார். தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் உடனடியாக மாணவியின் பெற்றோர் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கருமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவம், பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
English Summary
Shocking incident school premises 9 year old girl subjected harassment Construction worker arrested under POCSO Act