இரவு நேரத்தில் ஊடுருவும் காட்டுப்பன்றிகள்.. கடித்து குதறப்படும் உழைப்பின் உயிர்நாடி - கோவை மாவட்ட மக்கள் மத்தியில் நிலவும் பீதி..!
Wild Boar In KMTR
பாக்கு தோப்புகளுக்குள் படையெடுக்கும் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதங்களை தடுக்க நைலான் வலை வேலி அமைக்கும் பணியில் மேட்டுப்பாளையம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதியில் பெருமளவு பாக்கு விவசாயம் நடைபெற்று வருகிறது.
நீர்வளம் மிக்க நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் விளையும் பாக்குகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாக்கு மரங்களை குறிவைத்து தினசரி இரவு நேரங்களில் தோப்புகளுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகள் மரங்களின் வேர் பகுதியினை மண்ணை பறித்து தின்று தொடர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது.
காட்டுப்பன்றிகளால் மரங்களின் வேர் பகுதி துண்டிக்கப்படுவதால் மரம் பட்டுப்போய் பாக்கு விளைச்சல் வெகுவாக பாதிப்பிற்குள்ளாகிறது.
ஒரு பாக்கு மரக்கன்றை நட்டு அதனை முறையாக ஐந்தாண்டுகள் பராமரித்து வளர்த்தால் ஆறாவது ஆண்டில் இருந்து தான் விளைச்சல் கிடைக்கும்.
இவ்வாறு பெருமளவு முதலீடு செய்து பாக்கு மரங்களால் பலன் பெற ஐந்தாண்டுகள் காத்திருக்கும் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகளின் ஊடுருவல் கடும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தற்போது காட்டுப்பன்றிகள் நுழைவதை தடுக்க கல்லார் பகுதி விவசாயிகள் தங்களது பாக்கு தோப்பை சுற்றி நைலான் வலைகளால்ஆன வேலிகளை அமைத்துள்ளனர்.
தரையில் இருந்து சுமார் ஐந்தடிஉயரத்திற்கு இந்த வலை வேலி கட்டப்படுகிறது. இந்த வேலிகளை கடக்க முயன்றால் காட்டுப்பன்றிகளின் கால்கள் வலையில் சிக்கிக்கொள்ளும் என்பதால் இவை இந்த நைலான் வேலிகளை கடக்க முயற்சிப்பதில்லை.
இதனால் இரவு நேரங்களில் மலையடிவார காடுகளில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் பாக்கு தோப்பிற்குள் ஊடுருவும் முயற்சி பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாக்கு சீசன் துவங்கி அதற்கான அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் காட்டுப்பன்றிகளின் தாக்குதல் மற்றும் சேதங்களிலிருந்து விடுபட இந்த புதிய முயற்சி ஓரளவேனும் உதவுவதாக பாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில் யானைகள் மற்றும் குரங்குகள் போன்றவையும் பாக்கு தோப்புகளில் புகுந்து சேதம்ஏற்படுத்துவதாகவும் இதனை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.