தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது, மாவட்ட ஆட்சியர் எங்கே போனார்? உயர்நீதிமன்ற மதுரை கிளை ..!! - Seithipunal
Seithipunal


கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம்   ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது.  

இதையடுத்து, துப்பாக்கிசூடு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக 15 க்கும் மேற்பட்ட வழக்குகள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. உள்துறை செயலாளர், தலைமை செயலாளர், டிஜிபி ஆகிய மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சி.டி செல்வம் மற்றும் ரஷீத் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, எந்த வகையான துப்பாக்கிகள்,  தூத்துக்குடி சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டன என  நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும், 99 நாட்கள் நடந்த போராட்டத்தின் வீடியோ காட்சிகள் மற்றும் 99 நாள் உளவுத்துறை அறிக்கை ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை வருகிற 18 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்த போது, மாவட்ட ஆட்சியர் எங்கே போய் இருந்தார் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Sterlite Case Investigation High Court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->