கண்ணுக்கு தெரிந்தே நடக்கும் பகல் கொள்ளை! அதற்கு காரணம் மக்கள் தான்! மக்களே இனி விழிப்புணர்வாக இருங்கள்!
PEOPLE AWARNESS
தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் விலையும், சமையல் எரிவாயு விலையும் மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ளது. ஆனால் இவை அனைத்தும் மக்களை மிரள வைக்கும் அளவில் விற்கப்படுகிறது. ஆனாலும் இவற்றை சகித்துக் கொண்டுதான் மக்கள் காலத்தை ஓட்டி வருகின்றனர்.
ஆனால் இந்த நிலையிலும், மக்களை வெறுப்பேற்றும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் பகல் கொள்ளை நடக்கிறது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் மக்கள்தான்.
தோராயமாக சிலிண்டரின் விலை 800ல் இருந்து 850 வரை விற்கப்படுகிறது. அந்த சிலிண்டரை கொண்டுவருபவர்கள், அந்த ஏஜென்சி கொடுத்து அனுப்பிய ரசீதை தான் மக்களிடையே கொடுக்கின்றனர். ஆனால், அந்த ரசீதில் உள்ள தொகையை விட 50 ரூபாய் அதிகம் வைத்து வாங்குகின்றனர். அதற்கு காரணம் கேட்டால் நாங்கள் எல்லா இடத்திலும் அப்படித்தான் வாங்குகிறோம் முடிந்தால் வாங்கி கொள்ளுங்கள், இல்லாவிட்டால் திருப்பிக் கொடுத்துவிடுங்கள் கொண்டு செல்கிறோம் என கூறுகின்றனர்.
இந்த தவறை பணம் அதிகம் வைத்திருப்பவர்கள் முதலில் செய்ய ஆரம்பித்தனர். அதாவது கொண்டு வருபவர்களுக்கு 10ரூபாய் 20 ரூபாய் டிப்ஸாக கொடுத்தனர். ஆனால் சிலிண்டர் கொண்டுவருபவர்கள், நாளடைவில் அந்தத் தொகையை அதிகாரமாக கேட்டு வாங்க ஆரம்பித்து விட்டனர்.
இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்குவது, சமையல் எரிவாயு ஏஜென்சிக்கும் தெரிகிறது. ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை. காரணம் சிலிண்டர் கொண்டு வந்து போடுபவர்களுக்கு மிக குறைந்த ஊதியத்தை கொடுத்துவிட்டு, அவர்கள் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்குவதை கண்டுகொள்வதில்லை.
தயவுசெய்து அனைத்து மக்களும் விழிப்புணர்வாக இருங்கள். தினந்தோறும் நம் கண்ணுக்குத் தெரிந்த இதுபோன்ற தவறுகளை தட்டிக் கேட்காமல் தான், தமிழகம் முழுவதும் லஞ்சம் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. எனவே இனிமேல் சிலிண்டர் கொண்டு வருபவர்கள், ரசீதில் உள்ள பணத்தை விட அதிகம் பணம் வாங்கினால், தர முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பி விடுங்கள்.