அரசுவேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வாலிபர் கைது.!
near chennai man arrested for money fraud
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை அடுத்த பண்ணைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரகு. இவர் மனைவி பிஎட் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரகுவிடம், தான் சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் அலுவலகம் நடத்தி வருவதாகவும் ரயில்வே, வங்கி, மின்வாரியம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய ரகு, தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தரும்படி கார்த்திகேயனிடம் ரூ.12 லட்சத்தை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.4 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரை வாங்கி கொடுத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து ரகு கார்த்திகேயனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த ரகு ஆவடி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை தேடி வந்தனர். இந்த நிலையில், கார்த்திகேயன் சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தது போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் படி போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர்.
அதன் பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது, கார்த்திகேயன் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரம் வரை பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் கைதான கார்த்திகேயனை சிறையில் அடைத்தனர்.
English Summary
near chennai man arrested for money fraud