தூத்துக்குடி சம்பவத்திற்காக சரம்வாரியாக கேள்வி எழுப்பிய கமல்ஹாசன்!.
தூத்துக்குடி வாழ் சகோதர, சகோதரிகளின் மக்கள் நீதி மய்யம் தோளோடு தோள் நிற்கும் என கமல்ஹாசன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் மய்யம் விசில் செயலுக்கு தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதனை அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு இதுவரை தமிழகத்திலோ இந்தியாவிலோ இதுவரை கேட்டிடாத, கண்டிடாத நிகழ்வு. மனித உயிர்களை அதிக எண்ணிக்கையில் காவு வாங்கிய ஒரு துயரச்சம்பவம் அண்மை காலத்தில் நடந்தேறியது இல்லை. இந்த சம்பவம் குறித்து எந்த விளக்கமும் அளிக்காத தமிழக அரசின் மவுனம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவே உள்ளது.
யார் இந்த துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது?, துப்பாக்கி சூட்டுக்கு அனுமதியளிக்கப்பட்ட இடங்களின் தக்க விவரங்கள் என்னென்ன?.
துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விவரங்களும் குண்டுகளின் விவரங்களும் இன்னும் ஏன் அளிக்கப்படவில்லை?.
இறுதியாக துப்பாக்கி சூடு நடைபெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் ஏன் இன்னும் தெரியப்படுத்தவில்லை? துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் விவரங்களும், காயமடைந்தவர்களின் விவரங்களும் ஏன் இதுவரை அளிக்கப்படவில்லை?.
இரண்டாம் நாளில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் குறித்து முழுவிவரம் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படாதது ஏன்? இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு இதுவரை விடை அளிக்கவோ, விளக்கம் அளிக்கவோ இல்லை.
13 பேரின் உயிரிழப்புக்கு எந்தவித பொறுப்பு ஏற்காமல் தட்டிக்கழிப்பதும், அதுகுறித்த கேள்விகளுக்கு பதிலும் சொல்லாமல் இருப்பது மக்களாட்சியின் மாண்புக்கு உகந்தது அல்ல. மக்கள் நீதி மய்யம் ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில், தொடர்ந்து எந்தவித சுணக்கமும், தொய்வும் இன்றி தகுந்த ஆதாரங்களையும், தகவல்களையும் சேகரித்துக்கொண்டே இருக்கும். இந்த மண்ணையும், மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளில் மக்களின் குரலாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
தூத்துக்குடி வாழ் சகோதர, சகோதரிகளின் தோளோடு தோள் நின்று இந்த துயர சம்பவத்தில் பலியான போராட்டக்காரர்களுக்கு நீதி பெற்று தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என உறுதி அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kamal Haasan questioned for Thoothukudi incident!