பெரம்பலூர் அருகே போலி மதுபானம் தயாரித்து கைதான அதிமுகவினர்!! பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சிக்கியது!!
பெரம்பலூர் அருகே போலி மதுபானம் தயாரித்து கைதான அதிமுகவினர்!! பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சிக்கியது!!
திருச்சி மத்திய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, பெரம்பலூர் கல்பாடி பிரிவு சாலை அருகே ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, நேற்று மாலை அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தபட்டது.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது, துறைமங்கலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான அசோகன் என்பவரது மகன் கார்த்திக்(29) என்பவர், உமாகாந்த்(31), நித்யானந்த்(31), வினோத் குமார்(32) ஆகியோருடன் சேர்ந்து போலி மதுபானம் தயார் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்நால்வரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 'பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு அரசு ஊழியரின் வீட்டை மாதம் ரூ.5 ஆயிரத்து 500-க்கு வாடகைக்கு எடுத்து, அதிலும் போலி மதுபானம் தயாரித்து வருவதாக' கூறினர்.
இதையடுத்து, போலீசார் அந்த வீட்டை சோதனையிட்ட போது அங்கு, அப்போது அங்கு தலா 100 லிட்டர் வீதம் அடங்கிய 2 பேரல்களில் போலி மதுபானம் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த போலி மதுபானம், ஆயிரத்து 500 பாட்டில்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் போலி மதுபானம், அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
அத்துடன், போலி மதுபானம் தயாரிக்க வைத்திருந்த, 3 ஆயிரத்து 500 குவாட்டர் மது பாட்டில்கள், கேன்களில் இருந்த ஸ்பிரிட், மது பானத்தை பாட்டிலில் அடைத்து மூடி போடும் எந்திரம், போலி மதுபான ஸ்டிக்கர், அட்டை பெட்டி, எசன்ஸ் மற்றும் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சில நாட்களுக்கு முன் தஞ்சையில் போலி மதுபானம் தயாரித்து கைதானவர்களுக்கும், தற்போது பெரம்பலூரில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
fake drinks in perambalur