வழியில் நடந்து வந்தவருக்கு மரண அடி - உடல் செயலிழந்து படுத்த படுக்கை : தர்மபுரியில் 10 பேர் மீது பாயும் வன்கொடுமை தடுப்புச் சட்டம்..!
case filed against 10 persons
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம் பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் சிலம்பரசன் (25). கூலிதொழிலாளியான இவரை கடந்த ஜன.17 ஆம் தேதியன்று அண்ணாமலைப் பட்டியைச் சேர்ந்த ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியது.
இதில் படுகாயமடைந்த சிலம்பரசன், சுயநினைவை இழந்ததுடன், உடல் செயலிழந்து படுத்த படுக்கையாக உள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அண்ணாமலைப் பட்டியை சேர்ந்த குள்ளப்பன் மகன் அறிவழகன் என்பவர் மீது மட்டும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
ஆனால், இச்சம்பவத்தில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அரூர் காவல்துறையினர் அலைகழித்து வந்தனர்.
இதனையடுத்து சிலம்பரசனின் தந்தை சிவலிங்கம், தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து, இதுதொடர்பாக இருபது நாட்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சமீபத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தேசியஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனடிப்படையில் சிலம்பரசன் மீதான தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அண்ணாமலைப் பட்டியைச் சேர்ந்த குள்ளப்பன் மகன் அறிவழகன், குப்புசாமி மகன் சக்திவேல், சாமன் மகன் குமரவேல், தங்கராஜ் மகன் இளங்கோ, சின்னசாமி மகன்கள் தமிழரசன் ,காளியப்பன், சிஞானம் மகன் சுதாகர்,கரியன் மகன் முருகன், இளையான் மகன் இளையராஜா, மாணிக்கம் மகன் சேரன் ஆகிய 10 பேர் மீது எஸ்சி, எஸ்டி, வன்கொடுமை தடுப்புசட்டம் மற்றும் 147, 148, 294 (பி), 307 ஆகிய பிரிவுகளின் கீழ் தற்போது அரூர் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
English Summary
case filed against 10 persons