16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் பிரபல ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை!
16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் பிரபல ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது60). அரசு முதல்நிலை ஒப்பந்ததாரரான இவர், பல்வேறு சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் ஒப்பந்த முறையில் அமைத்துள்ளார்.
தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்து கொண்டுள்ளார்.
இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க பல கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு அருப்புக்கோட்டை மட்டுமின்றி மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் உள்ளது.
இன்று காலை 6.30 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள இவரது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் கார்களில் வந்து அதிரடியாக நுழைந்தனர். 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அருப்புக்கோட்டை டவுன் காவல் துறை இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிமுருகன், செந்தில் வேலன் மற்றும் காவலர்கள் செய்யாத்துரை வீடு, அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சியில் செய்யாத்துரைக்கு சொந்தமான நூற்பு மில் உள்ளது. அங்கும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் உள்ள எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
English Summary
16 officers simultaneously tested home with the famous contractor