ஒன்று கூடும் முக்கிய புள்ளிகள்.. ஓபிஎஸ்-ன் திட்டம் என்ன?.. பரபரப்பில் பாந்தியன் சாலை.!!
OPS team district secretary meeting today
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணியினரின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த மாதம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து அரசியலில் இணைந்து ஈடுபட போவதாக இருவரும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தின் மகன் திருமண நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். மேலும் கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் மாநாடு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எழுத்து பூர்வமான வாதங்கள் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் அணியினரின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை எக்மோர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் இன்று காலை 10.31 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த மாநாடு நடத்துவது குறித்தும், டிடிவி தினகரனுடன் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விரிவான ஆலோசனை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
OPS team district secretary meeting today