ஜிஎஸ்டியை கொண்டு நடைபெறும் மிகப்பெரிய மோசடி : ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அன்புமணி ராமதாஸ்..!!
ஜிஎஸ்டியை கொண்டு நடைபெறும் மிகப்பெரிய மோசடி
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டியால், பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல், சிறு குறு நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் நடைபெற்ற 23-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி மறுவரையறை செய்யப்பட்டது.
அதில், பல்வேறு பொருட்களுக்கான வரியை 18 விழுக்காட்டிலிருந்து, 5 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களுக்கு வரி சுமை குறையும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
அப்போது, பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இந்த வரிக்குறைப்பை வரவேற்றார். மேலும், 28% வரிப்பிரிவை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றும் தனது அறிக்கை மூலம் வலியுறுத்தினார்.
இந்நிலையில் ஹோட்டல்களில் ஜிஎஸ்டி வரி குறித்து இன்று மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதற்கு முன்பாக ஒரு வாடிக்கையாளர் ரூ.200-க்கு உணவு சாப்பிட்டால் அதற்கு 18% ஜிஎஸ்டி சேர்த்து ரூ.236 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி வரி 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதே உணவுக்காக வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.210 ஆக குறைக்கப்பட வேண்டும். அப்போது தான் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் பயன் நுகர்வோருக்கு கிடைக்கும்.
ஆனால், இப்போது உணவின் விலையை 200 ரூபாயிலிருந்து ரூ.225 ஆக உயர்த்தி, அதன் மீது 5% ஜிஎஸ்டியாக ரூ.11.25 சேர்த்து 236.25 ரூபாயை உணவகங்கள் வசூலிக்கின்றன. ஜி.எஸ்.டி குறைக்கப்பட்ட நிலையில் உணவுக் கட்டணம் குறைக்கப்படாமல் அதிகரிக்கப்படுவது முறையல்ல.
ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை மக்கள் அனுபவிக்காமல, சில ஹோட்டல்களே அனுபவிப்பது, மிகப்பெரிய மோசடி, என்று கூறியுள்ளார்.
இதனை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும், ஜிஎஸ்டி குறைப்பின் பலனை பொதுமக்களே அனுபவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவரது இந்த ஆதாரப்பூர்வ அறிக்கையை நிரூபிக்கம் வகையில், சகாயராஜ் என்ற நமது வாசகர் ஹோட்டல் பில் ஒன்றை நமது செய்தியில் பின்னூட்டமாக பதிவிட்டுள்ளார்.
அதில், சென்னையில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில், கடந்த 6-ம் தேதி பில்லையும், 16-ம் தேதி வரி குறைக்கப்பட்ட பின்னர் கொடுக்கப்பட்ட பில்லையும் இணைத்து, அந்த ஹோட்டல் செய்துள்ள மோசடியை அம்பலப்படுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani explores cheating with evidence