மன நோயாளியை குழந்தை கடத்துபவர் என நினைத்து அடித்து கொலை! 15 பேர் கைது!
திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியதால், மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அடித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மன நோயாளி ஒருவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் சடலத்தை கைப்பற்றிய மக்கள், அங்கு உள்ள மேம்பாலத்தில் மேலிருந்து கயிற்றால் கட்டி தொங்க விட்டுள்ளனர்.
தகவலறிந்த திருப்பாலைவனம் காவல்துறையினர் , சம்பவ இடத்திற்கு வந்து மன நோயாளியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் அப்பகுதி மக்கள் கூறுகையில், அவர் குழந்தை கடத்தும் நபர் இல்லை எனவும், கடந்த சில மாதங்களாக மனநிலை பாதித்து அப்பகுதியில் சுற்றி திரிந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களின் தாக்கத்தால் அவரை மக்கள் சிறிதும் யோசிக்காமல் அடித்துக் கொலை செய்துவிட்டதாக கூறுகின்றனர். இதனை தொடர்ந்து காவலர்கள் இந்த கொலை பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் 15 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். பின்பு காவல்துறையினர் அங்குள்ளவர்களிடம், மக்களுக்கு யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறும், மக்கள் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு யாரையும் தாக்கவேண்டாம் என காவலர்கள் மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
English Summary
Think of a mental patient as a kid kidnapped and killed