பாகிஸ்தான் உள்ளே புகுந்து அடிப்போம் - ராஜ்நாத் சிங் ஆக்ரோஷம்!
RajNath Singh interview
இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, பாகிஸ்தானுக்கு தப்பி ஓடும் தீவிரவாதிகளை அங்கேயே சென்று அழிப்போம் என்று, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
"அந்நிய மண்ணில் வாழும் தீவிரவாதிகளை வீழ்த்துதல் என்ற விரிவான தீவிரவாத ஒழிப்பு திட்டத்தின் கீழ், கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் பாகிஸ்தானில் 20 பேரை இந்தியா கொன்றுள்ளது" என்று, பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது.
இந்த செய்தி குறித்து ராஜ்நாத் சிங் பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இங்கே தீவிரவாத செயல்களை செய்து விட்டு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடினாலும், அவர்களை அங்கேயே சென்று வீழ்த்துவோம்.
அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் நல்லுறவு பேணவே விரும்புகிறது. ஆனால் யாரேனும் இந்தியா மீது கோபப்பார்வையை வீசினால், இந்தியாவில் தீவிரவாதத்தை விதைக்க முயன்றால் நாங்கள் அவர்களை சும்மா விடமாட்டோம்" என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் எந்த பதிலையும் தெரிவிக்காத நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேட்டி உலக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.