மல்லையா வழக்கில் புதிய சிக்கல்: இந்தியா திரும்புவது எப்போது!
Mallaya to go for appeal
விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அனுப்பத் தடையில்லை என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து அந்த தீர்ப்பின் நகல் இன்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பைப் பெற்றுக்கொண்ட உள்துறை அமைச்சகம் இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.
விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று விட்டு அதைத் திருப்பி அடைக்காமல் லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். இவர் மீது பல வங்கிகள் புகார் அளித்தன. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
இந்திய அரசு மல்லையாவை இந்தியாக் கொண்டுவர இங்கிலாந்து அரசுடன் பல்வேறுக் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் முடிவில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை இந்தியா திரும்ப அனுப்பக் கோரி வழக்குப் பதியப்பட்டது.
இந்த் வழக்கில் நீதிபதி எம்மா ஆர்புத்னாட் நேற்று இறுதித் தீர்ப்பை வழங்கினார். அதில், இந்தியாவில் பெரும் பணம் கடனாகப் பெற்றுவிட்டு இங்கிலாந்துத் தப்பி வந்த பொருளாதாரக் குற்றவாளியான விஜய் மல்லையாவை இந்தியா திருப்பி அனுப்ப எந்த தடையும் இல்லை எனத் தீர்ப்புக் கூறினார்.
மேலும் இந்த தீர்ப்பின் நகல் இங்கிலாந்தின் உள்துறை மற்றும் வெளியுறவுத் துறையிடம் அளிக்கப்படும் என்றும் அவர்கள் மல்லையாவை திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுப்பர் எனவும் கூறினார்.
இந்த வழக்கில் 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க உள்துறை அமைச்சகத்திற்கு கால அவகாசம் உள்ளது. விஜய் மல்லையா இரண்டு வாரத்துக்குள் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதால் உள்துறை அமைச்சகம் அதன் பிறகே முடிவு எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதில் இன்னும் கால தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.