"அறம்" படத்தில் கலெக்டர், நிஜத்தில் முதல்வர்- அரசியலில் குதிக்கத் தயாராகும் நயன்தாரா!
"அறம்" படத்தில் கலெக்டர், நிஜத்தில் முதல்வர்- அரசியலில் குதிக்கத் தயாராகிறார் நடிகை நயன்தாரா
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட உலகில் கடந்த பல ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்துவருபவர் நடிகை நயன்தாரா.
இதுவரை நடிப்பில் மட்டுமே தனது கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது அரசியல் களத்தில் குதிக்கப்போவதாக பேச்சு பரவி வருகிறது.
சமீபத்தில் கோபி நயினார் இயக்கத்தில் வெளிவந்த, ‘அறம்’ படத்தில் கலெக்டர் வேடத்தில் அசத்தியிருந்தார் நயன்தாரா. அந்த பதவியை கொண்டு அவர் எடுக்கும் நடவடிக்கைகளால் அரசியல்வாதிகளை பகைத்துக்கொள்ளும் நிலை உருவாகிறது.
இதனை அடுத்து தான் வகித்துவந்த கலெக்டர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு அரசியலில் குதித்து அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் அவர் நடைபோடுவதாக கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில்,தற்போது இப்படத்தின் 2வது பாகத்தை உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதில் அரசியலில் குதித்து நயன்தாரா முதலமைச்சர் ஆவது என்பதாக காட்சிகள் இருக்கும் என்று தெரிகிறது.
நயன்தாராவை சில வருடங்களுக்கு முன்பே தங்கள் கட்சியில் சேர்க்க ஒருசில அரசியல் பிரமுகர்கள் முயற்சி மேற்கொண்டதாகவும் அதிலிருந்து அவர் நழுவிச் சென்றதாகவும் பரவலாக பேசப்பட்டது.
தற்போதுள்ள சூழலில் அவர் திடீரென அரசியலில் களமிறங்கக் கூடுமென கூறப்படுகிறது.
சமகால அரசியல்வாதிகளின் போக்கை விமர்சிக்கும் வகையிலும், சமூக அவலங்கள் குறித்த தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அறம் 2 ஆம் பாகத்தை இயக்க இயக்குனருக்கு நயன்தாரா கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
English Summary
actress nayanthara will enter into politics