ஆகஸ்ட் 9ல் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள்.!
world nagasaki day
நாகசாகி தினம்:
அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று ஃபேட் மேன் (FAT MAN) என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின்மீது வீசியது. இக்குண்டு சுமார் 3.5 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது. இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர். அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்:
ஐ.நா.பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு தீர்மானத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதியை உலக பூர்வ குடிமக்கள் (ஆதிவாசிகள்) தினமாக அறிவித்தது. இத்தினம் 1995ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
பூர்வ குடிகளின் கலாச்சாரத்தை பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
எஸ்.ஆர்.ரங்கநாதன்:
இந்திய நூலக அறிவியலின் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வேதாந்தபுரம் கிராமத்தில் பிறந்தார்.
இவர் 1924ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக நூலகராக நியமிக்கப்பட்டார். பிறகு லண்டன் சென்று, அங்குள்ள சிறந்த நூலகரான டபிள்யூ.சி.பி.சேயர்ஸிடம் நூல்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை அறிந்தார்.
இவர் நூலகம் அறிவுசார் பிரிவினரை ஒன்றிணைத்து, சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். நூலக நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட நூல்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நூலகத் துறையில் 21 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக செயல்பட்டு பல புரட்சிகளை ஏற்படுத்திய இவர் 1945ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். நூலக அறிவியல் பட்டயப் படிப்பை அறிமுகம் செய்து, தானே கற்பித்தார். இந்திய நூலகச் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். டெல்லி, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
நூலக அறிவியல், ஆவணப்படுத்துதல், தகவல் அறிவியல் துறைகளின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் 80வது வயதில் (1972) மறைந்தார். இவரது பெயரில் ஆண்டுதோறும், சிறந்த நூலகர்களுக்கு நல்நூலகர் விருது வழங்கப்படுகிறது.