நடந்து செல்வதற்கே ஒரு சவாலான இடம்... வண்ண மயமான உலகம்.!!
Painted Dunes Desert
இயற்கை தந்த அழகான படைப்பில் பலபல அதிசயங்கள் நமக்கு தெரிந்தும், தெரியாமலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மனிதர்களாகிய நம்முடைய செயல்பாடுகள் இல்லாமலேயே இயற்கையாய் உருவான பல இடங்கள் உள்ளன.
அவைகளில் பல நமக்கு பிரம்மிப்பையும், ஆச்சரியத்தையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.
அந்த வகையில் பல வண்ணங்களில் பாலைவனம் போல் காட்சியளிக்கும் ஒரு இடத்தைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம்.
வட கலிபோர்னியாவில் உள்ள லேசன் தேசிய பூங்காவில் (Lassen Volcanic National Park) இந்த பெயிண்ட் டூன்ஸ் (Painted Dunes Desert) எனும் வண்ண மயமான உலகம் காணப்படுகிறது.
இந்த பெயிண்ட் டூன்ஸ் அதிசய வண்ண மணல் திட்டுகள் என அழைக்கப்படுகிறது.
ஏறக்குறைய 1600ம் ஆண்டுகளில் இந்த வண்ணமயமான மணல் திட்டுகள் உருவானதாக கூறப்படுகிறது.
அந்த காலங்களில் இவ்விடத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் வெளிவந்த சாம்பல்கள் இங்கு மணல் கூம்புகள் போல உருவாகியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
காலப்போக்கில் இந்த திட்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தால் பல வண்ண மயமான திட்டுகளாக உருவெடுத்து இப்பொழுது நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எரிமலை வெடிக்கும்போது ஏற்பட்ட சில எரிமலை துண்டுகள் சிக்கலான பாறைகளில் சிக்கி எரிவாயு குமிழ்கள் உருவானது எனவும் கூறுகிறார்கள்.
எரிமலையின் பெரும்பகுதி இந்த குமிழ்களின் அடிவாரத்தில் முதலில் பாய்ந்தது. சிமெண்ட் ஸ்கோரியா எனப்படும் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட லாவாக்கள் இதன்மீது படர்ந்து காணப்படுகிறது.
காலப்போக்கில் இதுவே நாம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வண்ணமயமான திட்டுகளாக மாறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் எல்லோரும் பிரம்மிக்கும் வகையில் இந்த திட்டுகளின் மீது ஒரு பெரிய நடைபாதை உள்ளது எனவும், இந்த நடைபாதையில் நடந்து செல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல எனவும், இதில் நடந்து செல்வது என்பது ஒரு சவாலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அங்குள்ள மணல் திட்டுகளில் மரங்களும் காணப்படுகின்றன. இந்த திட்டுகள் கிட்டத்தட்ட மூடிய புதைக்கப்பட்ட நிலையில் பெரிய கூம்புகளாக காணப்படுகின்றன.
இங்கு கடைசியாக ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக ஏறத்தாழ 700 அடி உயரமான சின்டர் கூம்பு ஒன்று உருவாகியது.
மேலும் இங்கு லாவா படுக்கைகள், விசித்திரமான புவியியல் அம்சங்கள் மற்றும் வர்ணம் பூசப்பட்டது போல் பல வண்ணங்களில் காணப்படுகின்றன.
என்னதான் மனிதன் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தாலும் இயற்கைக்கு இணையாக முடியாது என்பதை இயற்கை நமக்கு ஒவ்வொரு முறையும் உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறது.