அடுத்த இரு நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மட்டும் லேசான மழை.!
rain alert tn jan 9
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் முனைவர் நா. புவியரசன் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது,
"தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை இல்லை. இன்று மற்றும் நாளை (09.01.2022, 10.01.2022) தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
அடுத்த இரு நாட்கள் (11.01.2022, 12.01.2022) தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வருகின்ற 13 ஆம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
09.01.2022 முதல் 11.01.2022 : தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்தியரேகை பகுதிகளில் (1.5 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.