உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்.! ஆன்லைன் மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது.?!
online scam issue in tn
கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவசரத் தேவைக்கு பணம் அனுப்பும் போது வேறு வங்கிக் கணக்குக்கு அனுப்பி விட்டால் உடனே அருகில் உள்ள வங்கியை அணுகி தகவல் தெரிவிக்க வேண்டும். கூகுள் பக்கத்துக்கு சென்று போலியாக பதிவிடப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு ஏமாந்து, பணத்தை பறிகொடுத்து விடாதீர்கள்.
ஆன்லைன் மூலம் குறுகிய கால கடன் தருவதாக கூறி ஆதார், பான்கார்டு எண் போதும் என்ற விளம்பரத்தை பார்த்து கடன் பெற நினைத்தால், உங்கள் பெயரை வைத்து புதிய கணக்குத் தொடங்கி அதன்மூலம் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. போலி ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும்.
ராணுவத்தில் பணிபுரிவதாக கூறி போலி முகவரியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கார் மற்றும் மிலிட்டரி கேன்டின் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுத்தருவதாக கூறி முன்பணம் பெற்று மோசடி செய்யும் நிகழ்வுகள் நடப்பதால் நேரில் சென்று உண்மைத் தன்மையை அறிந்த பின்னர் தொகையை கொடுக்க வேண்டும்.
கே.ஒய்.சி.யை முழுமையாக பதிவிடக்கூறி ஆன்லைன் லிங்க் வந்தால், அதைதொடுதல் கூடாது. இந்த லிங்கைத் தொட்டவுடன் உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள பணம், பறிபோக வாய்ப்புகள் உள்ளது.
ஏ.டி.ம் கார்டுகள், செல்போன் பாஸ்வேர்டுகள், மெயில் பாஸ்வேர்டு ஆகியவற்றுக்கு ஒற்றை இலக்க எண்கள், பிறந்த தேதியை பயன்படுத்தாமல், எண்கள், எழுத்துக்கள், குறியீடுகள் போன்றவற்றை பயன்படுத்தி பாஸ்வேர்டை வலுவாக்குங்கள்.
உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வெகுநேரமாக நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை என்றால் மோசடி நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கிக் கணக்கை முடக்கிக் கொள்வது நல்லது. அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன் மூலம் அழைத்து உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது எனக்கூறி முன்பணம் கட்டச் சொன்னால் அந்த அழைப்பை துண்டித்து விடவும்.
பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளப் பக்கங்களில் உங்களது நண்பர்கள், தெரிந்தவர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி உங்களிடம் நண்பராக சேர்ந்து உங்களைச் சார்ந்த தகவல்களை பெற்று மிரட்டும் வாய்ப்புள்ளது. உறுதி செய்யாமல் தகவல்கள், படங்களை பதிவிடுவதை தவிர்க்கவும்.
உங்கள் செல்போன் எண்ணுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம் கார்டு புதுப்பித்து தருவதாகவும், அதற்கு ஓ.டி.பி எண், பான்கார்டு நம்பர் கூறும்படி பேசுவார்கள். ஓ.டி.பி எண்ணை கூறினால், அதைப் பயன்படுத்தி சேமிப்புக் கணக்கில் இருந்து தொகையை திருட வாய்ப்புள்ளது. இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட தவறுகள் நடந்தால் cybercrime.gov.in என்ற முகவரிக்கும், 155260 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம்." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.