விழுப்புரம்: காதல் திருமணம் செய்தவர் கொலை முயற்சி.. பெண் தரப்பு ஆற்றோரம் பரபரப்பு சம்பவம்.!
Viluppuram Love Married Person Murder Attempt 5 June 2021
காதல் திருமணம் செய்த இளைஞரை காரில் கடத்திய பெண்ணின் உறவினர்கள், அரிவாளால் வெட்டி ஆற்றோரம் வீசிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கரடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக சென்னையில் இருக்கும் ஏழுமலை என்பவரிடம் லாரி ஓட்டுனராக பணிக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.
ஏழுமலையின் மகள் நந்தினி. லாரி ஓட்டுநர் பணிக்கு சேர்ந்த ஆறுமுகம், தனது முதலாளியின் மகளான நந்தினியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ள ஆனைவாரி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த விஷயம் நந்தினியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, நந்தினியை காதல் கணவரிடமிருந்து பிரித்து, ஆனைவாரியில் உள்ள உறவினரின் வீட்டில் ஏழுமலையின் குடும்பத்தினர் தங்க வைத்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக நந்தினி கரடிப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது காதல் கணவர் ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று விடவே, இதனை அறிந்த நந்தினியின் சித்தப்பா அயன் என்ற பழனி, மாமா பார்த்திபன் மற்றும் மேலும் இருவர் சேர்ந்து நள்ளிரவு நேரத்தில் கரடிப்பாக்கம் கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த ஆறுமுகத்தை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள மலட்டாற்றின் கரையோரம் அழைத்துச் சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டி வீசிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், நந்தினி திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் அதிகாலை 4:30 மணியளவில் தனது கணவரை மீட்டு தரக்கூறி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்று உடனடியாக விசாரணையை மேற்கொள்ள தொடங்கிய காவல் துறையினர், மலட்டாற்றின் கரையோரத்தில் இருந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கிய உத்தரவின் பேரில், தனிப்படை காவல்துறையினர் நந்தினியின் சித்தப்பா பழனி மற்றும் மாமா பார்த்திபன் மேலும் இருவர் என 4 பேரை சேலத்தில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Viluppuram Love Married Person Murder Attempt 5 June 2021