ஒரேயொரு வாக்குகூட பதிவாகாத கிராமம்.. செஞ்சி மஸ்தான் தொகுதியில் ஷாக்..!!
Viluppuram Gingee Virpattu Village Peoples Reject Local Body Election 2021 Village Under Gingee Constituency
விற்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு பணியில் ஈடுபட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்காத காரணத்தால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டத்தில், அவியூர் - விற்பட்டு - சேதுராயநல்லூர் ஆகிய 3 கிராமங்கள் சேர்ந்து ஒரு பஞ்சாயத்தாக இருந்து வருகிறது. இந்த 3 ஊர்களில் அவியூர் பெரிய ஊர். சுதந்திரம் அடைந்ததில் இருந்து அவியூரில் இருந்து மட்டுமே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிற 2 ஊர்களை சார்ந்த வேட்பாளர்கள் கிராம பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்டாலும், அவியூரில் உள்ள வேட்பாளருக்கு அவரது சொந்த ஊர் மக்களின் ஆதரவு இருப்பதால், எதிர் வேட்பாளர்கள் தோல்வியை தழுவுகின்றனர்.
மேலும், கிராம பஞ்சாயத்து தலைவராக அவியூரை சார்ந்த நபர் தேர்வு செய்யப்படுவதால், பிற கிராமமான விற்பட்டு கிராமத்திற்கு எந்த விதமான நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. விற்பட்டு கிராமத்தை சார்ந்தவர்கள் ஒன்றிய கவுன்சிலராக கூட தேர்வு செய்யப்படுவதில்லை. இதனால் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் விற்பட்டு கிராமத்திற்கு கிடைக்காமல் சென்றுவிடுகிறது.
இதனால் ஆதங்கமடைந்துள்ள விற்பட்டு கிராம மக்கள், புதிய பஞ்சாயத்து கேட்டு தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். விற்பட்டு கிராம பொதுமக்கள், பா.ம.க., அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க ஆகிய கட்சியை சார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் ஒன்று சேர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திரம் பெற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், விற்பட்டு கிராம மக்கள் புதிய பஞ்சாயத்து கேட்டு, விற்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வு கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதிகாரிகள் தரப்பில் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர், வெளிநாடு வாழ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொகுதியின் கீழ் தான் அவியூர் பஞ்சாயத்தும், விற்பட்டு கிராமமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவியூர் பஞ்சாயத்தில் தான் வடதமிழகத்தில் திமுகவின் முக்கிய பிரமுகராக விளங்கிய செஞ்சியார் என்ற செஞ்சி இராமச்சந்திரன் முதன் முதலாக அவியூர், விற்பட்டு, சேதுராயநல்லூர் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர், திமுகவின் மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய இணை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அக். 9 ஆம் தேதியான இன்று இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை முதலாகவே விற்பட்டு கிராம மக்கள் யாரும் வாக்குகளை செலுத்த வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லவில்லை. மேலும், நாங்கள் கூறியவாறு விற்பட்டு கிராமத்தை தனியொரு புதிய ஊராட்சியாக அறிவிக்காத பட்சத்தில், தேர்தலை புறக்கணிப்போம் என்ற எங்களின் முடிவில் எவ்விதமான மாற்றுக்கருத்தும் இல்லை என்று ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : முன்னாள் மத்திய அமைச்சரின் சொந்த ஊரில் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்.. நடந்தது என்ன?..!
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Viluppuram Gingee Virpattu Village Peoples Reject Local Body Election 2021 Village Under Gingee Constituency