காவியை பார்த்தாலே தமிழக அரசுக்கு பயம்... வி.எச்.பி மாநில தலைவர் கிண்டல்..!!
VHP state president criticized TNgovt is afraid of saffron
ராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்த ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் "முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்ற கிராம கோவில்களுக்கான நலத்திட்ட விழாவில் பூசாரிகள் காவி உடை அணிய அதிகாரிகள் தடை விதித்து வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வர உத்தரவிட்டுள்ளனர்.
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது போல தமிழக அரசுக்கு காவியை பார்த்தாலே பயமாக உள்ளது. இது போன்ற இந்து மக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதால் மக்கள் அரசின் மீது வெறுப்பில் உள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட இந்து மக்களுக்கு எதிராக செயல்படவில்லை. கோவில் பூசாரிகளின் கோரிக்கையை ஏற்று திட்டங்களை செயல்படுத்தினார்.
திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கிராம கோவில்களில் உள்ள பூசாரிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என உறுதி அளித்து ஓராண்டாகியும் இன்னும் வழங்கவில்லை. கிறித்துவ பாதிரியாருக்கு உதவித்தொகை வழங்க தமிழக அரசு பரிசீலிக்கும் என கூறும் ஸ்டாலின் பூசாரிகளுக்கு மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்தும் இந்து கோவில் சடங்கு, கலாச்சாரத்தில் தலையீடு இல்லை. இதை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
English Summary
VHP state president criticized TNgovt is afraid of saffron