இருசக்கர வாகன விபத்தில் மனைவி உயிரிழப்பு.! கணவர் படுகாயம்.!
Twowheeler accident in namakkal district
நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் மனைவி உயிரிழந்துள்ளார். மேலும் கணவர் படுகாயமடைந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் தீர்த்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம்(50 ). இவரது மனைவி ராதாமணி(47). இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் தேவம்பாளையத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஜேடர்பாளையம் அருகே சென்றபோது திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால், இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதில் 2 பேரும் பலத்த காயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராதாமணி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராதாமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Twowheeler accident in namakkal district