திருச்சி: பகுதிநேர பணி செய்து வந்த கல்லூரி மாணவரை அடித்து துன்புறுத்திய காவலர்கள்..!!
Trichy Part Time Job Youngster Attacked by Police
பகுதிநேர பணியாக நிறுவனத்தின் நிலுவை தொகையை வசூல் செய்ய சென்ற கல்லூரி மாணவர், உரிமையாளருக்கு ஆதரவான காவல் அதிகாரிகளால் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்புரம் காஜாமலை பகுதியை சார்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வணங்காமுடி (வயது 21). இவர் கரூரில் வணிகவரித்துறை அதிகாரியாக இருந்து வரும் தாயாருடன், திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரில், " வணங்காமுடி ஆகிய நான் திருச்சி ஈ.வி.ஆர் கல்லூரியில் இளங்கலை பட்டம் மூன்றாம் வருடம் பயின்று வருகிறேன். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த சமயத்தில், திருச்சியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பகுதி நேர வேலையில் இணைந்தேன். அங்கு, விற்பனை மற்றும் வசூல்பிரிவில் பணியாற்றி வருகிறேன்.
இந்நிலையில், துவாக்குடி பகுதியில் இருக்கும் நிறுவனத்திற்கு, எங்களின் நிறுவனம் பொருட்கள் விநியோகம் செய்து வந்தது. அந்த நிறுவனம் ரூ.2 இலட்சத்து 19 ஆயிரம் பாக்கி வைத்திருந்த நிலையில், இதனை வசூலிக்க முடியாத காரணத்தால் எனது சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன்பின்னர், திருச்சி மன்னார்புரம் கண்ணப்பா உணவக பகுதியில் இருக்கும் அந்நிறுவன உரிமையாளரின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்ட நிலையில், அங்கு வந்த காவல் துறை வாகனத்தில் இருந்த அதிகாரிகள், என்னை காவல் வாகனத்தில் ஏறச்சொல்லி அடித்து துன்புறுத்தினர்.
என்னுடன் வந்திருந்த நண்பரையும் அவர்கள் தாக்கினர். இதன்பின்னர், திருச்சி கண்டோமென்ட் காவல் நிலையத்தில் கைரேகை மற்றும் கையொப்பம் வாங்கிவிட்டு, பணம் கேட்டு அவரின் வீட்டிற்கு சென்றால் தொலைத்துவிடுவேன் என்று கூறி மிரட்டினார்கள். நான் ஏற்கனவே காவல் நண்பர்கள் குழுவிலும் பணியாற்றி உள்ளேன்.
என்னை உதைத்த காவல் அதிகாரிகள் மற்றும் நிலுவைத்தொகையை தராமல் காவல் துறையை ஏவி அட்டூழியம் செய்த நிறுவன உரிமையாளர் மீது அந்டவடிக்க எடுக்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மனுவை ஏற்று விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy Part Time Job Youngster Attacked by Police