மின் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க கட்டணமா? அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின்படி நடவடிக்கை!
TNEB warns of strict action charges for linking Aadhar and electricity number
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு முகாம் தமிழக அரசு சார்பில் அனைத்து மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் நடைபெற்று வருகிறது. பண்டிகை நாட்களை விடுத்து ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடியதை காரணம் காட்டி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. நேற்று துவங்கப்பட்ட சிறப்பு முகாமை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
அதன் அடிப்படையில் மின்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பு முகாமிற்கு வரக்கூடிய முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறும் பொழுது கணினிகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். காலை 10:30 மணிக்கு முதல் மாலை 5:30 மணி வரை கட்டாயம் சிறப்பு முகாம் நடைபெற வேண்டும்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பேனர்கள் வைக்க வேண்டும். அதேபோன்று அந்த விளம்பரங்களில் ஆதார் எண் இணைப்பதினால் மானியங்களும் இலவச மின்சாரமும் ரத்த ஆகாது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோரிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது. அவ்வாறு ஏதேனும் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
English Summary
TNEB warns of strict action charges for linking Aadhar and electricity number