பிரதமரின் திட்டத்தில் மெகா மோசடி.. திருப்பத்தூரில் அரசு அதிகாரிகள் கைவரிசை.. 18 பேரின் மீது வழக்கு.!
Tirupattur Alangayam Prime Minister Housing Scheme Govt Officers Forgery 23 Persons Fund
ஆலங்காயத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்த 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 18 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெக்ணாமலை புருஷோத்தமன்குப்பம் கிராமத்தில் கடந்த வருடம் ஜூலை 10 ஆம் தேதி குடிசை வீட்டில் வசித்து வந்த அய்யம்மாள் என்ற 60 வயது மூதாட்டி, தொடர்மழை காரணமாக வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.
இவருக்கு பிரதமரின் வீடு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், ஊராட்சி செயலாளர் நிதியை கையாடல் செய்ததால் அவருக்கு வீடு கட்டி வழங்கப்படவில்லை என்றும், வீடு இருந்திருந்தால் அவர் உயிரிழந்திருக்கமாட்டார் என்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் கடந்த வருடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து, ஆலங்காயம் ஊராட்சியில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது உண்மைதானா? என்பது தொடர்பாக வேலூர் மாவட்ட இலஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இந்த விசாரணையில், ஆலங்காயம் ஊராட்சியில் 2017 - 2018 ஆம் வருட பயனாளிகளின் பட்டியலில் உள்ள தகவலின் படி விசாரணை நடந்தது.
விசாரணையில், அய்யம்மாள் உட்பட 23 பேருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என அரசின் ஆவணத்தில் இருந்துள்ளது. ஆனால், பனாளிகளுக்கு ரூ.1 கூட வீடு கட்ட என வழங்கப்படவில்லை. இதனையடுத்து, விசாரணையின் முடிவில் 23 பயனாளிகளின் மூலமாக ரூ.35 இலட்சத்து 31 ஆயிரத்து 517 முறைகேடு செய்யப்பட்டது உறுதியானது. அரசு அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து முறைகேடு செய்ததும் அம்பலமானது.
கிடைத்த ஆதாரங்களின் பேரில் ஆலங்காயம் கிராம ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) பணியை மேற்கொண்ட ரமேஷ்குமார் (தற்போது வேலூர் மாவட்ட தணிக்கை பிரிவு உதவி இயக்குனர்), வசந்தி (தற்போது திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்), வின்சென்ட் ரமேஷ் பாபு, துணை பி.டி.ஓ அருண் பிரசாத், ரமேஷ் பாபு, சீனிவாசன், அழகுராசு, ஞான பிரசாத், தாமரைச்செல்வன், கார்த்திகேயன், வஜ்ஜிர வேல், சுரேந்திரன், எம்.எஸ். முரளி, இராஜேந்திரன், கணபதி, பூபாலன், பாண்டியன், சிவா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Tirupattur Alangayam Prime Minister Housing Scheme Govt Officers Forgery 23 Persons Fund