20 வயது வாலிபரை கொலை செய்து, ஆற்றில் சாக்கில் கட்டி வீசி சென்ற பயங்கரம்.. கூடங்குளத்தில் பேரதிர்ச்சி.!
Tirunelveli Koodankulam 20 Aged Youngster Ajithkumar Murder Police Investigation 1 August 2021
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகேயுள்ள ஆற்றங்கரை பள்ளிவாசல் நம்பியாற்றில், நேற்று காலை இரத்தம் படர்ந்திருந்தவாறு சாக்கு மூட்டை கிடந்தது. இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் இறைச்சி கழிவை கொட்டிவிட்டு சென்று இருக்கலாம் என அதனை திறந்து பார்த்துள்ளனர்.
அந்த சாக்குப்பையில், 20 வயது மதிக்கத்தக்க வாலிபரின் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் பிணமாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனையடுத்து, இது தொடர்பாக கூடங்குளம் காவல் துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்த கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையிலான காவல் துறையினர், காயத்துடன் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.
இந்த விசாரணையில், கொலையான வாலிபர் பணகுடி பகுதியை சார்ந்த சுப்பையா என்பவரின் மகன் அஜித் குமார் (வயது 21) என்பதும், சம்பவத்தன்று வீட்டில் இருந்து காலை 7 மணியளவில் வெளியே புறப்பட்டு சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அஜித் குமாரை கொலை செய்தது யார்?. எதற்காக கொலை செய்தார்கள்?. உடலை மறைக்க சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசப்பட்டது எதனால் என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tirunelveli Koodankulam 20 Aged Youngster Ajithkumar Murder Police Investigation 1 August 2021