திருவண்ணாமலை மகாதீபம் இன்றுடன் நிறைவு.!
Thuruvannamalai karthigai Deepam today last day
தமிழத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பௌர்ணமி கிரிவலம் என பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரபலமானதாகும். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவண்ணாமலை அருண்ச்சலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த டிசம்பர் 6ம் தேதி மாலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.
இந்த மகா தீபம் 11 நாட்கள் மலையின் உச்சியில் காட்சி அளிக்கும். தொடர்ந்து 10-வது நாளாக நேற்றும் கொழுந்துவிட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபம் இன்று இரவுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து, நாளை (சனிக்கிழமை) காலை மகா தீப கொப்பரையை மலையில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும்.
English Summary
Thuruvannamalai karthigai Deepam today last day