தஞ்சாவூர்: குளத்தில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்..!
Thanjavur 2 Child Died on Pond Police Investigation 25 Sep 2021
செண்பகபுரம் அருகே குளத்தில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் பலியான சோகம் கிராம மக்களை கவலையுற வைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செண்பகபுரம் பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தில், இன்று காலை அப்பகுதியை சார்ந்த எட்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுமிகள் கௌசிகா, ரூபிகா ஆகியோர் குளிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில், குளத்தில் குளிக்க சென்ற சிறுமிகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், நண்பகல் 12 மணியளவில் சிறுமிகளை தேடி குளக்கரைக்கு வந்துள்ளனர். குளத்தில் யாரும் இல்லை.
இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் சிறுமிகளை பல்வேறு இடங்களில் தேட, 1 மணியளவில் சிறுமிகளின் உடல் குளத்தில் மிதக்க தொடங்கியுள்ளது. விரைந்து சென்ற குடும்பத்தினர் இருவரையும் மீட்ட போது நீரில் மூழ்கி அவர்களின் உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
குளத்தில் குளிக்க சென்ற சிறுமிகள் இருவரும் நீரில் மூழ்கி பலியான பரிதாபமாக, செண்பகபுரம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், பிள்ளைகளின் உடலை மடியில் கிடத்தி பெற்றோர்கள் கதறியழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
மேலும், சிறுமிகள் உயிரிழந்த குளம் சமீபத்தில் தான் குடிமராமத்து திட்ட பணிகள் வாயிலாக ஆழப்படுத்தப்பட்டு இருக்கிறது. சிறுமிகள் இருவரும் ஆழம் தெரியாமல் குளத்தில் சென்று குளித்து, ஆழமான பகுதிக்கு சென்று உயிரிழந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தனியாக குளம், குட்டை, கிணறு போன்ற நீர் நிலைகளுக்கு அனுப்ப கூடாது எனவும் அறிவுறுத்துகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thanjavur 2 Child Died on Pond Police Investigation 25 Sep 2021