ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் இளைஞரை துப்பாக்கியால் சுட்ட கொடூர சம்பவம்..! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் தாலுகா லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து குமரன். பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கொரோனா காலத்தில் முத்துகுமரன் தனது வேலை இழந்து வாழ்வாதாரத்தை  பறிகொடுத்ததால் காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கினார். ஆனால் அதிலும் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வராததனால் இரண்டு மகன்களையும் படிக்க வைப்பதற்கு சிரமப்பட்டார்.

இதையடுத்து,  வெளிநாடு சென்று பணிபுரிவதற்கு முடிவு செய்த முத்துக்குமரன், வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மூலம் குவைத்துக்கு செல்ல ஏற்பாடு செய்தார். இதற்காக முத்துகுமரன் ஒருவரிடம் 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கடந்த 3-ந் தேதி அவர் ஐதராபாத் நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றார். குவைத்துக்கு சென்ற முத்துக்குமரன் 4, 5, 6-ந் தேதிகளில் அவர் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர் தனக்கு குவைத் வேலை பிடிக்கவில்லை. ஊர் திரும்பிவிடலாமா? என்று யோசிக்கிறேன் என்று மனைவியிடம் வருத்தப்பட்டு பேசினார். 

இந்நிலையில் 7-ந்தேதி முதல் முத்துக்குமரன் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவருடன் பேச முடியாமல் அவரது மனைவி தவித்தபடி இருந்தார். இதற்கிடையே கடந்த 9-ந் தேதி குவைத்தில் முத்துகுமரன் மரணமடைந்து விட்டதாக அதிர்ச்சி செய்தி வித்யாவுக்கு வந்தது. இதனால் வித்யாவும், அவரது குடும்பத்தினரும் நிலை குலைந்து போனார்கள். கணவர் முத்துகுமரன் எப்படி மரணமடைந்தார். என்ன நடந்தது? என்பது தெரியாமல் தவிப்புக்குள்ளானார்.  ஐதராபாத் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது குடும்பத்தினர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதேபோல் அரசு தரப்பு மூலம் முயற்சி செய்தபோதும் அதற்கு சரியான பலன் ஏற்படவில்லை. இதனால் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் வித்யா கதறி புலம்பியபடி இருந்தார்..

இந்நிலையில் குவைத்தில் முத்துகுமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. குவைத்துக்கு சென்ற முத்துகுமரன் அங்குள்ள சபா அல்அகமது சிட்டி என்ற பகுதியில் ஒருவரிடம் பணிக்கு சேர்த்து விடப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் பொது பெரிய நிறுவனத்தில் குமாஸ்தா வேலை வாங்கி தரப்படும். அப்படி அந்த வேலை கிடைக்காத பட்சத்தில் சிறு சிறு பணிகளை செய்யும் வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்கள்.  

ஆனால் முத்துகுமரனுக்கு இந்த இரண்டு வேலைகளும் வழங்காமல், பணக்காரர் வீட்டில் ஒட்டகம் மேய்க்கும் வேலை செய்வதற்கு வலியுறுத்தியுள்ளார்கள். முத்துக்குமரன்  இதற்கு மறுப்பு தெரிவித்ததனால், அவருக்கும் அவர் முதலாளிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதையடுத்து முத்துகுமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த முதலாளி முத்துகுமாரனை அடித்து உதைத்து சித்திரவதை செய்து, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இந்நிலையில், குவைத்தில் இருந்து வெளியாகும் ஐமன் மேட் நியூஸ் என்ற பத்திரிகையில் 24 வயது குவைத் பிரமுகர் 30 வயது இந்திய தொழிலாளியை சுட்டுக் கொன்றுள்ளார் என்று செய்தி வெளியானது. 

முதலில் முத்துகுமரன் பற்றிய தகவல் தெரியாமல் இருந்தது. ஆனால் அந்த செய்தியில் சபா அல்அகமது பாலைவன பகுதியில் துப்பாக்கி சூடு நடந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏர் ரைபிள் மூலம் இந்திய தொழிலாளி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதுகுறித்து குவைத் விசாரணை குழுவினர், தீவிர விசாரணை நடத்தியபிறகு தான் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது தமிழகத்தை சேர்ந்த முத்துகுமரன் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக முத்துகுமரனின் மனைவி வித்யா தெரிவித்ததாவது:- 

குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் கஷ்டம் காரணமாகவே தனது கணவர் வெளிநாடு செல்ல முடிவு செய்தார். 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய அவர் யார் மூலம் எப்படி? குவைத் செல்கிறார் என்ற விவரங்களை எனக்கு தெரிவிக்கவில்லை. யார் அவரை குவைத்துக்கு அனுப்பி வைத்தார் என்பதும் தெரிவிக்கப்படவில்லை. அவர் குவைத் சென்று சேர்ந்த பிறகுதான் ஐதராபாத் நிறுவனம் அவரை அனுப்பி இருப்பது எனக்கு தெரிந்தது. 

அவர் குவைத் சென்று சேர்ந்ததும், மோகனா என்ற பெண் என்னிடம் பேசினார். அவர் அங்குள்ள உள்ளூர் ஏஜெண்ட் ஆவார். நல்ல வேலை பெற்று தருவதாக சொன்ன அவர் எனது கணவரை ஒட்டகம் மேய்ப்பதற்காக ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இது பற்றி எனது கணவர் தொலைபேசியில் என்னிடம் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். 

இதனால் நான் அவரை ஊருக்கு திரும்பி வந்துவிடும் படி தெரிவித்தேன். மோகனாவிடமும் எனது கணவரை திருப்பி அனுப்பி விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை. எனது கணவர் இன்று உயிரோடு இல்லை. அதுபற்றி கூட அவர்கள் சரியான தகவல் தெரிவிக்கவில்லை. எங்களது பக்கத்து ஊரைச் சேர்ந்த உறவினர் ஒருவர் குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் நான் தகவல் தெரிவித்து விசாரிக்க சொன்னேன்.

அப்போதுதான் எனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவரம் எனக்கு தெரியவந்தது. இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் தகவல் பெற முயன்றேன். மாவட்ட நிர்வாகத்திடமும் முயற்சி செய்தேன். ஆனால் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இதுபற்றி திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் கேட்கப்பட்டபோது அவர் தெரிவித்ததாவது:- முத்துகுமரனின் மனைவி வித்யா எனக்கு மனு கொடுத்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரிய அதிகாரிகளுக்கு நான் அந்த மனுவை அனுப்பி இருக்கிறேன். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்று திருவாரூர் கலெக்டர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu young man shoot for camel graze


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->