தமிழ்நாட்டில் மதவெறுப்பு மோதலுக்கான அடித்தளம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. இந்த பேராபத்தினை முன் கூட்டியே தடுக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக, மத அடிப்படையில் பெரும்பான்மையாக உள்ளவர்களை மத வெறுப்பை நோக்கி தள்ளும் ஒரு கும்பலும், அதே மதவெறுப்புக்கு உள்ளே அவர்களை இழுக்கும் மற்றொரு கும்பலும் இங்கு திட்டமிட்டு செயல்பட்டு தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக்க துடிக்கின்றனர். அவர்கள் சமூக ஊடகங்களை முதன்மை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
தமிழக முதல்வரின் அறிக்கை
"தமிழ்நாடு அரசு எக்காலத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது. அமைதிப் பூங்காவாகத் திகழும் நமது மாநிலத்தில், பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வந்ததிகளை பரப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இது ஒரு அவசியமான அறிக்கை ஆகும்.
1. "முற்போக்கு கும்பல் கிளப்பும் மதவெறி!"
தமிழ்நாட்டின் முதன்மையான மாநில கட்சிகள் எதுவும் மதவெறி அடிப்படையில் இயங்கவில்லை. ஒருசில மத அடிப்படைவாத குழுக்கள் தவிர இங்கு மதவெறியை மூலதனமாகக் கொண்டு செயல்படும் அரசியல் பேரியக்கம் எதுவும் இல்லை. ஆனால், இத்தகைய நல்லிணக்கத்திற்கு வேட்டுவைக்கும் பணியில் தற்போது, திமுகவும், அக்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் முற்போக்கு கும்பலும் ஈடுபட்டுள்ளன. அவை திட்டமிட்டு மதவெறுப்பை வளர்க்கின்றன.
தமிழ்நாட்டின் பெரும்பாலான முஸ்லிம்கள் பாஜக எதிர்ப்பு உணர்வில் உள்ளனர். இது இயல்பானது. எதிர்பார்க்கக் கூடியதுதான். இவ்வாறு பாஜக எதிர்ப்பு உணர்வில் இருக்கும் முஸ்லிம்கள் - இயல்பாகவே, பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளை பெரும்பாலும் ஆதரிக்கின்றனர். அதுவும் இயல்பானது தான்.
ஆனால், திமுக கூட்டணி ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் பலரும், திமுகவுக்கு எதிராக உள்ள மாநில கட்சிகள் மீது வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக, திமுகவுக்கு எதிராக இருக்கக் கூடிய அதிமுக மற்றும் பாமக மீது இவர்கள் வன்மத்தை உமிழ்கின்றனர். இது மிக மோசமான விளைவுகளை உருவாக்கக் கூடியது ஆகும். (அதிமுக மற்றும் பாமக கட்சிகளுக்கு மத அடிப்படைவாத நோக்கம் எதுவும் இல்லாத நிலையில், அக்கட்சிகள் மீது முஸ்லிம்களில் கணிசமானோர் மிக மோசமான தாக்குதலை தொடுப்பது மிகத் தவறான செய்கை ஆகும்)
இயல்பாகவே முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இயங்கும் அதிமுக மற்றும் பாமக மீது - திமுக ஆதரவு முஸ்லிம்கள் அநாகரீகமான வெறுப்பை சமூக ஊடகங்களில் வெளியிடுவது, திமுகவின் வெறுப்பு அரசியலாக பார்க்கப்படவில்லை. மாறாக, அவை முஸ்லிம்களின் இந்து மத எதிர்ப்பாக அதிமுக மற்றும் பாமக தொண்டர்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. இதனால் அதிமுக மற்றும் பாமக தொண்டர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான மதவாத கருத்துக்களை வெளிப்படுத்தும் கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது காலப்போக்கில், இந்து மதம் சார்ந்த மதவெறியர்களின் கரத்தை வலுப்படுத்துவதாகவே முடியும்.
இவ்வாறாக, திமுகவும் அதன் கூட்டணியாக செயல்படும் முற்போக்கு இயக்கங்களும் தங்களது குறுகிய கால அரசியல் லாபத்துக்காக முஸ்லிம்களை பகடைக் காய்களாக மாற்றி, தமிழ்நாட்டில் மதவெறியை கட்டமைக்கிறார்கள் என்பதே உண்மை ஆகும்.
2. "பெரும்பான்மை மதவெறியை கிளப்பும் கும்பல்"
அனைத்து மதக்கலவரங்கள் மற்றும் அனைத்து இனப்படுகொலைகளின் தொடக்கமாக இருப்பது கட்டுக்கதைகள் தான். தமிழ்நாட்டில் ஒரு கும்பல் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக்கதைகளை பரப்புகிறது. குறிப்பாக வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் வெறுப்பு கருத்துகளை மிகத்தீவிரமாக பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
'முஸ்லிம் மதம் மட்டும்தான் மற்ற மதங்களை ஒடுக்குகிறது' என்று கதை விடுகிறார்கள். ஆனால், இலங்கையில் புத்த மதத்தினரால் தமிழர்களும் முஸ்லிம்களும் இனப்படுகொலை செய்யப்படுவதையும், மியான்மரில் முஸ்லிம்கள் இனப்படுகொலை ஆவதையும், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்காவின் கிறிஸ்தவ வெள்ளை இனவெறியால் அனைத்து பிரிவினரும் பாதிக்கப்படுவதையும் வசதியாக மறைக்கிறார்கள்.
'உலகில் எந்தவொரு முஸ்லிம் நாட்டிலும் மக்கள் நிம்மதியாக இல்லை' என்று கதை விடுகிறார்கள். ஆனால், உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இந்தியா போலவே தான் வாழ்க்கை இருக்கிறது. மலேசியா, துபாய், அபுதாபி, குவைத், சௌதி அரேபியா போன்ற பல முஸ்லிம் நாடுகளில் மக்கள் வசதியாகவும் செழிப்பாகவும் வாழ்கிறார்கள் என்கிற உண்மையை மறைக்கிறார்கள்.
'சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதை உலகம் ஆதரிக்கிறது' என்று கதைவிடுகிறார்கள். ஆனால், அந்தக் கொடுமையை உலகின் பெரும்பாலான நாடுகள் எதிர்க்கின்றன. உலகின் பெரும்பான்மை ஊடகங்கள் கண்டிக்கின்றன. ஐநா மனித உரிமைகள் பேரவை இதனை ஒரு முக்கிய சிக்கலாக கருதுகிறது.
இவ்வாறாக, முஸ்லிம்கள் குறித்த கட்டுக்கதைகளை மிக நுட்பமாக, நம்புவது போல வடிவமைத்து அப்பாவி இந்துக்கள் மனதில் திணிக்கிறார்கள்.
"மதக்கலவர பேராபத்தை நோக்கி பயணிக்கும் தமிழ்நாடு"
தகவல் தொழில்நுட்ப புரட்சி என்பது மனித வாழ்வை மேம்படுத்திய மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அதே தகவல் தொழில்நுட்ப புரட்சிதான் உலகை அழிக்கும் பேரவு ஆயுதமாக மாறியுள்ளது. குறிப்பாக, இணைய வசதிகளும் சமூக ஊடகமும் உலகெங்கும் வன்முறை பேரழிவை நிகழ்த்தி வருகின்றன. இந்த போக்கில் இருந்து தமிழ்நாடு தப்பிக்க முடியாது!
தமிழ்நாடு பெரிய அளவிலான மத மோதல்களுக்கு (Violent Religious Extremism) தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் இளைஞர்களை மத மோதலை நோக்கி தள்ளும் வேலையை (Push Factors) ஒரு குழுவினர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணியின் குறுகிய கால அரசியல் லாபத்துக்காக, முஸ்லிம்களை பயன்படுத்தி இந்துக்கள் மீது வெறுப்பு கருத்துகள் வீசப்படுகின்றன. அதாவது அதிமுக மற்றும் பாமக தொண்டர்கள் மீது வீசப்படும் முஸ்லிம்களின் வெறுப்பு பேச்சுகள் மதவெறிக்கு வழிசெய்கின்றது.
மறுபக்கம், இளைஞர்களை மத மோதலுக்கு உள்ளே இழுக்கும் பணியை (Pull Factors) இன்னொரு குழுவினர் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலை லாவகமாக பயன்படுத்தி, முஸ்லிம்கள் தொடர்பான கட்டுக்கதைகளை இந்து மதம் சார்ந்த மதவெறிக்கும்பல் பரப்புகிறது.
வெளிப்பார்வைக்கு, இவை ஒன்றுக்கொன்று எதிரானவை போன்று தெரிந்தாலும் - இரண்டும் ஒரே வன்முறை வண்டியின் இரண்டு குதிரைகள் ஆகும்! இந்த மத வன்முறையை முன்கூட்டியே எதிர்க்கொள்ளாவிட்டால் பேராபத்தில் முடியும்.
எனவே, இந்த சிக்கல்கள் குறித்து, அரசியல் இயக்கங்கள், மத அமைப்புகள், பொதுநல அமைப்புகள் அனைத்தும் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கைவிட்டு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலன் கருதி விவாதிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும். குறிப்பாக, திமுக கூட்டணியின் இந்து மத வெறுப்பையும், அதே போன்று முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக்கதைகளையும் தமிழகம் முறியடிக்க வேண்டும்.
பின் குறிப்பு: "மத அடிப்படையிலான கட்டுக்கதைகளை எதற்காக தடுக்க வேண்டும்?"
மத அடிப்படையிலான கட்டுக்கதைகள் சாதாரணமானவை அல்ல. அவைதான், மாபெரும் இனப்படுகொலையின் தொடக்கம் ஆகும். தமக்கு தெரிந்தவர்கள், சமூகத்தில் பிரபலமான நபர்கள் என பலராலும் ஒரு மதத்தை குறித்த தப்பெண்ணம் ஒரே மாதிரியாக பரப்பப்படும் போது, காலப்போக்கில் அந்த தப்பெண்ணம் உண்மை தான் என்று பலராலும் நம்பப்பட்டுவிடுகிறது. கூடவே, இயல்பான நிகழ்வுகளை திரித்து சுட்டிக்காட்டுதல், புள்ளிவிவரங்களை தமக்கேற்ற வகையில் மாற்றி அளித்தல் என பலவிதமான கதையாடல்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி அந்த தப்பெண்ணம் வலுவாக உறுதி செய்யப்படுகிறது.
ஒரே மாதிரியான எதிர்மறைக் கருத்துகளும் (Negative stereotypes) அவை உருவாக்கும் தப்பெண்ணமும் (prejudice) மிகமோசமான ஆபத்தை உருவாக்கக் கூடிய பெரும் கேடுகள் ஆகும். உலகின் மிக மோசமான கொடூர ஆயுதம் என்பது அணு குண்டு இல்லை. மாறாக, இத்தகையை எதிர்மறை தப்பெண்ணங்கள் தான் கொடூரமான அழிவு ஆயுதங்கள் ஆகும்.
நேரடையாகவோ, சமூக ஊடகங்களின் வழியாகவோ ஒரே குழுவை, அல்லது ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக சேரும் போது - தமக்கு எதிரானதாக கருதிக்கொள்ளும் வேறொரு சமூகம் குறித்து இத்தகையை தப்பெண்ணத்தை வலுவாக நம்புகிறார்கள்; பரப்புகிறார்கள்.
இந்த தப்பெண்ணம் (prejudice) மீதான நம்பிக்கை 'வெறுப்பு பேச்சு' (Hate Speech) என்கிற நிலையில் இருந்து, வெறுப்பு குற்றம்' (Hate Crime) என்கிற அடுத்த நிலைக்கு மாறுகிறது. மாபெரும் வன்முறை நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன.
சாதாரணமானதாக கருதப்படும் தப்பெண்ணம் தான் - மிகப்பெரிய வெறுப்பு குற்றமாக மாறுகிறது. ஆனால், வெறுப்பு குற்றம் என்பதும் அதன் முடிவு அல்ல. மாறாக, ஒரு இனத்தை முற்றிலுமாக அழித்து முடிக்க வேண்டும் என்கிற இனப்படுகொலை நோக்கம் தான் அதன் இறுதி இலக்கு ஆகும்.
இவ்வாறாக, ஒரே மாதிரியான எதிர்மறைக் கருத்துகள் (Negative stereotypes) தப்பெண்ணமாக (prejudice) மாறுதல், தப்பெண்ணம் வெறுப்பு பேச்சாக (Hate Speech) வெளிப்படுதல், வெறுப்பு பேச்சு என்பது வெறுப்புக் குற்றத்தை (Hate Crime) தூண்டுதல், வெறுப்புக் குற்றம் இனப்படுகொலையாக (Genocide) மாறுதல் - என்கிற படிநிலையில் தான் உலகெங்கும் இனப்படுகொலை நடத்தப்பட்டது.
வெறுப்பு பிரச்சாரங்கள் (Hate Propaganda) குறிவைக்கப்படும் சமூகத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் வல்லமை வாய்ந்தவை ஆகும். வெறுப்புக் குற்றம் என்பது ஒரு நாட்டில் வாழும் எந்தவொரு மனிதரையும் தனித்து விடுவதில்லை. 'குற்றம் செய்தவர்களுக்கு தானே பாதிப்பு. அதில் தொடர்பில்லாதவர்களுக்கு எந்த கவலையும் இல்லை' என யாரும் தப்பிச்சென்றுவிட முடியாது. உலகின் மேம்பட்ட நிலையை அடைந்த பல நாடுகள் இத்தகைய குற்றங்களால் படுபாதகமான கேடுகளுக்கு மாறியுள்ளன. வறுமை நிலையில் இருந்து மீண்ட பல நாடுகள் இந்த குற்றங்களால் மீண்டும் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளன.
எனவே, தமிழ்நாட்டில் கட்டமைக்கப்படும் மத அடிப்படையிலான கட்டுக்கதைகளை முன் கூட்டியே தடுத்து, தமிழ்நாட்டின் அனைத்து மக்களையும் காப்பாற்ற வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.