"குடிசை பகுதி மக்களை மறுகுடியமர்வு" திட்ட வரைவு அறிக்கை விவகாரம்.. அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை.. சி.பி.ஐ.எம் செல்வா..!
Tamilnadu CPIM G Selva Request to TN Govt 13 Oct 2021
தமிழ்நாடு அரசு "குடிசை பகுதி மக்களை மறுகுடியமர்வு" வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும், ஆங்கிலத்தில் மட்டும் அறிவிக்கை வெளியிட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திடுக என சி.பி.ஐ.எம் வேண்டுகோள் வைத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (எம்) மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் "குடிசை பகுதி மக்களை மறு குடியமர்வு" செய்வது தொடர்பான புதிய கொள்கையை அறிவிப்போமென தெரிவித்திருந்த அடிப்படையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் அரசின் புதிய வரைவு கொள்கையை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அறிக்கை வெளியிட்ட 15 தினங்களுக்குள் (அக்டோபர் 27க்கு முன்பு) கருத்துக்களை இணையவழியில் தெரிவிக்க கூறப்பட்டுள்ளது.
அரசின் நிதிநிலை அறிக்கையில் உறுதியளித்தது போல குடிசைப்பகுதி மக்களை மறுகுடியமர்வு செய்வதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டதும், மக்களிடம் கருத்து கேட்க முன்வந்ததும் பாராட்டத்தக்கது. அறிக்கையின் உள்ளடக்கம் குறித்தும், அரசின் மறுகுடியமர்வு திட்டம், அதை அதிவேகப்படுத்துவதற்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எடுக்கும் முயற்சிகள் குறித்து பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும் ஆலோசனைகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.
ஆனால், வாழ்விட உரிமை சார்ந்த, மக்கள் மத்தியிலிருந்து ஆலோசனை பெறவேண்டிய, முக்கியமான செயல்பாட்டில், வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் கொள்கை சார்ந்த செயல்பாடுகளில் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக அரசின் திட்டத்தோடு சம்பந்தபட்ட மக்களும், கருத்து சொல்வதற்கு ஏற்ற வழிவகையை உருவாக்க வேண்டியது தமிழக அரசின் அடிப்படை கடமை.
எனவே, தமிழ்நாடு அரசு "குடிசை பகுதி மக்களை மறுகுடியமர்வு" வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். தமிழில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுபோல மக்களின் கருத்துக்களை தெரிவிக்க உரிய காலம் வழங்குவதும் அவசியம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tamilnadu CPIM G Selva Request to TN Govt 13 Oct 2021