கி.பி 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான ஆலயம் மழையில் இடிந்து விழுந்த சோகம்!
tamil old temple damaged
மயிலாடுதுறை அருகே கி.பி 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான ஆலயம் சிதிலமடைந்திருந்த நிலையில் சூரிய மண்டபம் மழையில் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. கோயிலை புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டையில், கிபி 3-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அழகியநாதர் ஆலயம் அமைந்துள்ளது. செங்கல் கட்டடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோயில் சோழர் காலத்தில், சோழப்பேரரசி செம்பியன் மாதேவியால் கருங்கல் திருப்பணி செய்யப்பட்ட சிறப்புடையது. நாயக்க மன்னர் காலத்தில் எழுப்பப்பட்ட கட்டிடங்களும் இந்த ஆலயத்தில் உள்ளது.
சூரிய பகவான், தனக்கு ஏற்பட்ட குலமநோய் நீங்குவதற்கு இங்குள்ள அம்பாளை வழிபாடு செய்து நோய் நீங்கப்பெற்றதாக ஆலய தல வரலாறு கூறுகின்றது. எங்கும் இல்லாத வகையில், 7அடி உயர சூரியன்
சிலை, அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரே அமையப்பெற்றுள்ளது. இக்கோயில் பண்டைய தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகின்றது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தொன்மைவாய்ந்த இந்த ஆலயம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கோபுரங்கள், பக்கவாட்டு சுவர்கள், சுற்றுப்பிரகார மண்டபங்களில் மரங்கள் முலைத்து இடியும் தருவாயில் உள்ளது. வவ்வால் மண்டபத்தின் மேற்கூறையின் ஒருபகுதி சிதிலமடைந்ததால் அங்கு யாரும் செல்லாதவாறு வேலி வைத்து தடுத்துள்ளனர்.
தினமும் நித்திய காலபூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தினந்தோறும் வழிபாடு செய்துவருகின்றனர். கோயிலை புனரமைக்க கோரி வந்த நிலையில் தொடர்ந்து தற்போது பெய்துவரும்
மழையால் நேற்று இரவு சூரிய மண்டபம் இடிந்து விழுந்தது. கோயிலில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. உடனடியாக கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : மணி