உதகை நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு..!! 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு..!!
Sudden landslide on uthagai highway due to rainfall
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழை வழக்கமாக பெய்ய கூடிய மழை அளவை விட 2 மடங்கு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை உதகை அடுத்த கூக்கல்தொரை பகுதியில் 200 மீட்டர் நீளத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலைச்சரிவில் பெரிய பாறைகள் விழுந்துள்ளதால் நெடுஞ்சாலை அதிக அளவில் சேதம் அடைந்துள்ளது.
இதனால் 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. நெடுஞ்சாலையின் ஒருபகுதி முற்றிலும் சரிந்து அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்றுள்ளது. இந்த நிலச்சரிவு அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்திற்கு விரைந்த நெடுஞ்சாலைதுறையினர் ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு சாலையை சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரிய பாறைகள் சாலையின் குறுக்கே விழுந்து உள்ளதன் காரணமாக ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
English Summary
Sudden landslide on uthagai highway due to rainfall