ஏழை, எளிய மாணவர்களுக்காக சொந்த செலவில் பேருதவி செய்யும் தலைமை ஆசிரியர்.. திருவில்லிபுத்தூரில் நெகிழ்ச்சி.!!
Srivilliputhur padikasuvaithanpatti Govt School HM Give Mobile for students
விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருவில்லிபுத்தூர் அருகே இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 2020 - 2021 ஆம் கல்வியாண்டில், முதல் ஐந்து வகுப்புகளுக்கு சேரும் அனைத்து மாணவ - மாணவியர்களுக்கும் இணைய வழி கல்வியை எளிதாக தொடர தேவையான வசதியை தலைமையாசிரியர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதற்காக மாணவ மாணவியர்களுக்கு அலைபேசியும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருவில்லிபுத்தூர் படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை பணியாற்றி வரும் நிலையில், கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கிறது.
இதனால் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கிராமத்தில் இருக்கும் பெரும்பாலானோர் கூலித் தொழில் செய்து வரும் நிலையில், இவர்களுக்கு அலைபேசி என்பது பெரும் கனவாக இருக்கிறது. தலைமையாசிரியர் ஜெயக்குமார் முதல் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் அலைபேசி வாங்கி கொடுக்க முடிவு செய்து, முதல் கட்டமாக முதல் நாளில் சேர்ந்த நான்கு மாணவ மாணவியர்களுக்கு அலைபேசி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக தெரிவித்த தலைமை ஆசிரியர், இந்த பள்ளியில் முதல் வகுப்பிற்கு புதிதாக மாணவர்கள் வந்தால், அவர்களுக்கு செல் போன் விலை இல்லாமல் வழங்கப்படுகிறது என்றும், இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அண்ணா நகரில் இருந்து படிக்க வரும் மாணவ - மாணவிகள் வசதிக்காக சொந்த செலவில் ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Srivilliputhur padikasuvaithanpatti Govt School HM Give Mobile for students