தசரா பண்டிகை - கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு..!
special bus for dhasara festival
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற முத்தாரம்மன் கோவிலில் வருகிற 26-ந்தேதி இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்தத் திருவிழா பன்னிரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த தசரா திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பல்வேறு வேடம் அணிந்து குழுக்களாகவும், தனித்தனியாகவும் காணிக்கை வசூல் செய்து கோவிலில் படைப்பர். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி நடந்த இந்தத் திருவிழாவில் இந்த ஆண்டு லட்சகணக்கான பக்தர்கள் திரண்டுவருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தசரா பண்டிகையை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
"குலசேகரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் வரும் 1.10.2022 முதல் 04.10.2022 வரை சென்னையில் இருந்து திருச்செந்தூர் குலசேகரப் பட்டினத்திற்கும் மற்றும் கோவையில் இருந்து திருச்செந்தூர் குலசேகரப் பட்டினத்திற்கும் வழக்கமாக இயக்கக்கூடிய பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாகவும் 06.10.2022 முதல் 10.10.2022 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேற்படி பேருந்து வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special bus for dhasara festival