72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.,யின் உடல் நல்லடக்கம்!
spb last minute
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி உடல்நிலை முதலில் சீராக இருந்தது.
பின்னாளில் உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எஸ்.பி.பி உடல்நலம் தேறி வர வேண்டும் என்று திரையுலகினரும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வந்தனர்.
செப்டம்பர் 25 ஆம் தேதியான நேற்று மதியம் 1.04 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த தகவலை முதலில் அதிகாரபூர்வமற்ற முறையில் நான் துக்கத்தில் இருக்கிறேன், சிறிதளவு நம்பிக்கை இருக்கிறது என்று பாரதிராஜா தெரிவித்திருந்தார்.
இதன்பின்னர், இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்த நிலையில், எஸ்.பி.பி மகன் தனது தந்தையின் இறப்பு செய்தியை கண்ணீருடன் உறுதி செய்தார். பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் போன்ற பல விருதுகளை வாங்கிய பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும், தமிழக மக்களின் மனதில் மட்டுமல்லாது இந்திய மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் என்றும், காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை மற்றும் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து, செங்குன்றம் அருகேயுள்ள தாமரைபாக்கத்தில் பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை செலுத்தினர். எஸ்பிபி உடலுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை, 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.,யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.