களைகட்டிய சட்டப்பேரவை.!! கதை சொன்ன செல்லுராருக்கு., காட்பாடியின் கவுண்ட்டர்.!! இறுதியில் க்ளீன் போல்டு ஆக்கிய எடப்பாடி.!!
sellur raju trolls dmk stalin
சட்டப்பேரவையில், இன்று மானிய கோரிக்கை குறித்து, விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு கதையை கூறினார். அதில், "ஒரு தந்தை, தனது மகளுக்கு வரன் பார்த்தார். எந்த ஒரு ஜாதகமும் அவருக்கு பொருத்தமாக அமையவில்லை. இந்நிலையில் தரகர் ஒரு ஜாதகத்தைக் கொண்டு வந்தார். அந்த வரனுடன் 8 பொருத்தம் நன்றாக இருந்தது. 8 பொருத்தம் உள்ளது. இதுவே, போதும் என தந்தை முடிவு செய்து பெண்ணிடம் சம்மதம் கேட்க அவரும் சம்மதித்தார்.
திருமண ஏற்பாடு களை கட்டியது. இந்நிலையில், மணமேடையில் புரோகிதர் மந்திரம் கூறி மணமகனின் கையில் பொரியை கொடுத்தார். ஆனால், மணமகன் அவர் சாப்பிட கொடுக்கிறார் என நினைத்து, யாக குண்டத்தில் போடாமல் அதை தனது வாயில் போட்டார், உடனடியாக புரோகிதர், 'அட அபிஷ்ட்டு பொரியை யாக குண்டத்தில் போட வேண்டும். வாயில் போட்டுக்கொள்ள இல்லை" என கூறினார்.
உடனே, மணமகன் வாயில் போட்ட பொரியை யாக குண்டத்தில் துப்பினார். இதனால் புரோகிதர் மாப்பிள்ளையை கடிந்துகொண்டார். தாலியை எடுத்து கட்டச் சொல்லி மாப்பிள்ளையிடம் நீட்டவே, மாப்பிள்ளை "நான் எது செய்தாலும் நீங்கள் குறை சொல்கிறீர்கள். பேசாமல் நீங்களே தாலி கட்டி விடுங்கள்." எனக் கூற மண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது.
பிறகு, பெண்ணின் தந்தையிடம் தரகர், "மாப்பிள்ளைக்கு சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இதுதான் குறைபட்ட இரண்டு பொருத்தங்கள்." என தெரிவிக்க, உடனே பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தி விட்டார். இதுபோல தான் சிலருக்கு மனப்பொருத்தம் வாய்க்கும், மணமேடை கூட வாய்க்கும். ஆனால், திருமணம் நடக்காது என மறைமுகமாக ஸ்டாலினின் முதல்வர் கனவை சுட்டிக்காட்டிப் பேசினார்.
ஆவேசமடைந்த திமுகவினர், வழக்கம் போல மேஜையை தட்டி ஆர்ப்பரிப்பு செய்தனர். பின்னர் காட்பாடி துரைமுருகன்," திருமணத்தில் பத்து பொருத்தமும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் மாப்பிள்ளை சேர்த்து விடுவான்." என தெரிவித்துள்ளார்.
அதற்கு, "எப்படியும் உங்கள் கட்சி ஜாதகத்தை நம்ப போவதில்லை. பிறகு, ஏன் நீங்கள் அதுகுறித்து பேசுகிறீர்கள்." என முதல்வர் செல்லுராரை பாராட்டும் விதமாக பேச, உடனே, "ஜாதகம் எங்களுக்கு பார்க்கவில்லை. உங்களுக்கு தான்" என துரைமுருகன் மீண்டும் கூற, "எங்களுக்கு ஜாதகம் நன்றாக இருப்பதால் தான், நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். உங்களைப்போல மேலேயும், இல்லாமல் கீழேயும் இல்லாமல் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கவில்லை." என எடப்பாடி இறுதி பஞ்சை கொடுக்க, திமுகவினர் 'கப்சிப்' ஆனார்கள்.
English Summary
sellur raju trolls dmk stalin