குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு! போராட்டக்காரர்கள் தமிழகத்தில் கைது!
SDPI protest against CAB Bill
அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து SDPI கட்சி சட்ட நகல் எரித்து போராட்டம் இன்று நடைபெற்றது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவின் நகல் எரிப்பு போராட்டம் நாடு முழுவதும் இன்று (டிச.10) நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. நகல் எரிப்பு போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தடையை மீறி மாவட்ட தலைவர் சபீக் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்று மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க கூடாது என்றும் புதிய சட்ட திருத்த மசோதாவிற்கு வாக்களித்த அதிமுக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர்.
இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் சபீக் அஹமது துணைத்தலைவர் கண்ணன் மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது ரஃபி, மாவட்ட செயலாளர்கள் கமாலுதீன், ஜியாவுதீன், முஹம்மது லாபிர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் முஹம்மது சலீம் மற்றும் தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரலாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். பிறகு சட்ட நகலை எரிக்க முயன்ற பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர்
English Summary
SDPI protest against CAB Bill