பேருந்து நிலையத்தில் மாணவர்களிடையே தகராறு..விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்...கூடுதல் பாதுகாப்பு போலீஸ் நியமனம்..!
school students fight in anna bus stand
நாகர்கோவிலில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.இதனால் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதேபோல் நேற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மாணவர்கள் மாறி மாறி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதனால், பொதுமக்கள் மாணவர்களை தடுக்க முயன்றனர். புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பேருந்து நிலையத்திற்கு போலீசாரும் வந்து தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்தனர்.
மேலும், பிடிபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் அவர்களை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக தாக்குதல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மாணவிகளுடன் பேசுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் இரு தரப்பினராக மோதிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அண்ணா பேருந்து நிலையத்தில் காலை, மாலை என இரண்டு நேரங்களில் கூடுதல் போலீசாரை ரோந்து பணிக்கு நியமிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதில் தனிக்கவனம் செலுத்தி கூடுதல் போலீசாரை அண்ணா பேருந்து நிலையம், வடசேரி பேருந்து நிலையத்திற்குள் காலை, மாலை நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு நியமனம் செய்து ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இல்லாவிட்டால் மிகப் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படும் சூழல் ஏற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
school students fight in anna bus stand