சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்! காவலர் மீது கொலை வழக்கு பதிவு!
sathankulam police hari krishnan involve in murder issue
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடி குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம் தண்ணீர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செல்வத்திற்கும் அதிமுக பிரமுகர் திருமணவேல் என்பவருக்கும் அதே பகுதியில் உள்ள நில தகராறு கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் எதிர் தரப்புக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி செல்வம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறை தனக்கு எதிராக செயல்படுவதாக செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனையும் இந்த வழக்கில் சேர்க்கலாமா? என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை செல்வம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் அவரை வழி மறித்த மர்ம கும்பல் செல்வத்தை காரில் கடத்தி சென்று நெல்லை மாவட்டம் திசையன்விளை என்ற காட்டுப்பகுதியில் அவரை கொலை செய்து விட்டு உடலை அங்கேயே விட்டு சென்றனர்.சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், செல்வதை கொலை செய்தது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தான் என செல்வத்தின் உறவினர்கள் குற்றசாட்டை வைத்தனர்.
இத்தகைய சூழலில் நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் திருமணவேல் உள்ளிட்ட சிலர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிரட்டுள்ளார்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு இரட்டை கொலை வழக்கில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
sathankulam police hari krishnan involve in murder issue