சாத்தான்குளம் சம்பவம்! 5 போலீசார் மீது அதிரடி நடவடிக்கை! வேகமெடுக்கும் விசாரணை!
Sathankulam issue 5 poice suspended
சாத்தான்குளத்தில் வியாபாரிகள் தந்தை, மகன் மரணமடைந்த விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகம் முழுவதும் பல தரப்பில் இருந்தும் போராட்டம் வெடித்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தால் அரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரும் அடுத்தடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரையும் முதலில் கைது செய்தனர்.
விசாரணையின் தொடர்ச்சியாக, அதே காவல்நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று (ஜூலை 12) உத்தவிட்டுள்ளார்.
இதே விவகாரம் தொடர்பாக விசாரிக்க வந்த நீதித்துறை நடுவரை அவதூறாகப் பேசிய காவலர் மகாராஜன் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றியதில் இதுவரை 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
English Summary
Sathankulam issue 5 poice suspended