சேலம் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொலை விவகாரம்..! குற்றவாளியை., சீமான் பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் பள்ளிச்சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற கொலைக்குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, " சேலம் மாவட்டம், தாரமங்கலம், கீழ்மட்டையாம்பட்டியைச் சேர்ந்த 9 வயது பள்ளிச்சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த தனபால் எனும் நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அச்சிறுமி கூச்சலிட்டதால் கொலைசெய்த சம்பவம் கேள்வியுற்றுப் பேரதிர்ச்சியடைந்தேன். 

அறவுணர்ச்சியையும், ஒழுக்கத்தையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கற்பித்த தமிழ்ச்சமூகத்தில் நடந்தேறும் இதுபோன்ற கொடிய நிகழ்வுகள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது. வணிகமே நோக்கமாகக் கொண்டு மனிதர்களைப் பண்டமாக மாற்றியிருக்கிற தற்கால ஆட்சியாளர்களின் நவீன சந்தைப்பொருளாதாரக் கொள்கைகளின் வெளிப்பாடாகவே இச்சமூகம் குற்றச்சமூகமாக மாறி நிற்கிறது.

தமிழகத்தில் கொரோனோ ஊரடங்கு தொடங்கப்பட்டுப் பள்ளிகள் மூடப்பட்ட காலத்திலிருந்து வீட்டில் தனியாக இருக்கும் பள்ளிச் சிறுமியர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது தொடர் நிகழ்வாகி வருகிறது. மேலும், இக்கொடியச்செயலில் ஈடுபட்டக் குற்றவாளி மதுபோதையில் இருந்ததும் தெரிய வருகிறது. ஒருபுறம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், மறுபுறம், மதுபானக் கடைகள் மட்டும் தொடர்ந்து இயங்க அரசு அனுமதிப்பது குற்றச்செயல்கள் அதிகரிக்கப் பெருங்காரணமாகிறது. 

ஏற்கனவே, பாலியல் வன்கொடுமைகள் என்பது தொடர் நிகழ்வாகி மாறிவரும் சூழலில், அதற்கெல்லாம் மூலவேராக விளங்குவது அரசு நடத்தும் மதுபானக்கடைகளேயாகும். அருந்தும் மதுபானங்களால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனோ நோய்த்தொற்று எளிதில் பரவுவதோடு, மதுபானக்கடைகளில் அலைமோதும் கூட்டநெரிசலின் காரணமாகவும் கொரோனோ அதிகம் பரவுவதைச் சுட்டிக்காட்டி, மதுப்பானக்கடைகளை உயர்நீதிமன்றமே மூட அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுபானக்கடைகள் மூடப்பட்டிருந்தால் பள்ளிச்சிறுமி கொல்லப்பட்ட இந்நிகழ்வும் நடந்தேறியிருக்காது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுபானக்கடைகளை நிரந்தரமாக மூடுவோம் என்று கடந்த காலங்களில் உறுதியளித்த திமுக, புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தமிழகத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகளையும் மூடும் உத்தரவுக்கான கையெழுத்தை முதல் கையெழுத்தாக இட்டு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பினையும், நம்பிக்கையையும் நிறைவேற்றிச் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழ்ச்சமூகத்தைப் பேரழிவிலிருந்து தடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பள்ளிச்சிறுமியை கொடூரமாகக் கொன்று கொடியச்செயலில் ஈடுபட்டக் குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்திலும், கொலைவழக்கின் கீழும் கைதுசெய்ய வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் விசாரணை அறிக்கைப்படி, மேற்கூறிய காமுகன் கஞ்சா போதையில் இருந்ததாகவும், அவன் ஏற்கனவே கஞ்சா போதையில் பெண்களிடம் அத்துமீறியதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது என தெரியவருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem 9 Aged Child Girl Sexual Abuse and Murder by Kanja Culprit Seeman condemn 6 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->