உளவுத்துறையின் அறிக்கை பார்த்த பிறகே தீர்ப்பு! - சென்னை உயர் நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நவம்பர் 6ஆம் தேதி அன்று ஊர்வலத்தை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் காவல்துறையினர் அதற்கான நிபந்தனைகளையும் வரையறைகளையும் வகுத்து அனுமதி அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை கடலூர்,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் சார்பில் காவல் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு வந்தது. அப்பொழுது ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் "கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மற்ற இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறையின் அறிக்கையை காரணம் காட்டி தமிழக அரசின் தப்பிக்க பார்க்கிறது. அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது தான் அரசின் கடமை. அமைதியான ஊர்வலத்தை யார் தடுக்க முடியாது அது ஜனநாயக உரிமை" என வாதிட்டார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞரான ராஜகோபால் "தமிழகம் அமைதி பூங்கா என சொல்லிவிட்டு பேரணி நடத்த அனுமதி கேட்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்கிறார்கள்" என தமிழக அரசை குற்றச்சாட்டினார். மற்றொரு வழக்கறிஞரான ராஜா ஆஜராகி "அனுமதி வழங்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார். அப்பொழுது காவல்துறையினிடம் "மற்ற இடங்களில் ஏன் அனுமதி வழங்கவில்லை?" என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

காவல்துறையினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ "ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தமிழகத்தில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மூன்று இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி கேட்டு உள்ள 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக இருக்கிறது. மற்ற 24 இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக அனுமதி வழங்க இயலாது" என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதி "கோவை தவிர மற்ற இடங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்திருக்கலாமே?" என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் "மக்களின் பாதுகாப்பே முக்கியம் என காவல்துறை கருதுகிறது. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்ட ஒழுங்கு குறித்து உளவுத்துறை தரும் தகவல்களை எவ்வாறு யூகம் அல்லது அனுமானம் என சொல்ல முடியும்" என கேள்வி எழுப்பி உளவுத்துறையின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் தரப்பில் "உள்ளரங்க கூட்டம் நடத்த முடியாது, பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்" என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் உளவுத்துறை அறிக்கையை பார்த்த பிறகு மற்ற 47 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rss rally Judgment after verifying the intelligence report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->