குடித்துவிட்டு தினமும் சண்டை.. மனமுடைந்த பெண் 3 வயது பச்சிளம் குழந்தையுடன் தற்கொலை செய்த சோகம்.!
Ranipet Kaveripakkam Mother Suicide with 3 Aged Child due to Husband Daily Drinks and Torture
குடிகார கணவனின் தொல்லை தாங்காத பெண்மணி மகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பக்கத்தை அடுத்திருக்கும் சித்தஞ்சி கிராமத்தை சார்ந்தவர் தயாளன். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தயாளனுக்கு வெண்ணிலா (வயது 35) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகள் இருவருக்கும் கீர்த்தி என்ற 5 வயதுடைய மகனும், ஹரிதா என்ற 3 வயதுடைய மகளும் உள்ளனர். கூலித்தொழிலாளியான தயாளனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினமான நேற்றும் மதுபானம் அருந்திய தயாளன், இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும் மனைவியுடன் வழக்கம்போல தகராறு செய்துள்ளார். பின்னர் வெளியே புறப்பட்டு சென்ற நிலையில், தயாளனின் தாயார் தாயம்மாள் வீட்டிற்கு வெளியே படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனது குழந்தைகளுடன் இருந்த வெண்ணிலா, கணவர் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வந்து தகராறு செய்கிறாரே என மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். மன உளைச்சலில் மகனின் கைகளை வீட்டில் இருந்த நாற்காலியில் கட்டி வைத்த வெண்ணிலா, மகள் ஹரிதாவை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு பின்புறம் சென்றுள்ளார்.
வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் குழந்தைகள் விளையாட கட்டப்பட்டு இருந்த சேலையில் மகள் ஹரிதாவை தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதனால் 3 வயதுடைய பச்சிளம் சிறுமி ஹரிதா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மகள் உயிரிழந்ததை உறுதி செய்த வெண்ணிலா, பின்னர் அதே மரத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலையில் எழுந்த உறவினர்கள் வெண்ணிலா மற்றும் அவரது குழந்தை ஹரிதா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து, அவலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவலூர் காவல் நிலைய அதிகாரிகள், வெண்ணிலா மற்றும் ஹரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனின் மதுப்பழக்கத்தால் தினமும் மனத்துயருக்கு உள்ளாகிய பெண்மணி, வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணி மகளுடன் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Ranipet Kaveripakkam Mother Suicide with 3 Aged Child due to Husband Daily Drinks and Torture