இளைஞர் சக்தி நினைத்தால் இமயத்தையும் இழுத்து வர முடியும் - டாக்டர் ராமதாஸ்!
ramadoss tweet
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இளைஞர்கள் எவ்வாறு பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதனை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அவை, "நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்: உங்கள் இரு சக்கர ஊர்திகளை வீடுகளுக்குள் விட்டு பூட்டி வையுங்கள். அத்தியாவசியத் தேவைக்காக அன்றி வேறு எதற்காகவும் அவை சாலைகளை எட்டிப் பார்க்கக் கூடாது. அதுவே கொரோனா தடுப்புக்கு நீங்கள் செய்யும் பெருந்தொண்டு!
இளைஞர் சக்தி நினைத்தால் இமயத்தையும் இழுத்து வர முடியும். அப்படிப்பட்ட உங்களால் தான் தமிழ்நாட்டு மக்களைக் காக்க முடியும். நாட்டு மக்களின் உயிர்கள் உங்கள் கைகளில் இருப்பதாக கருதிக் கொள்ளுங்கள். அவர்களை பாதுகாப்பதற்காக சாலைகளுக்கு வராமல் வீட்டிலேயே மகிழ்ச்சியாக வாழுங்கள்!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு வழங்கியுள்ள அறிவுரைகளை முழுமையாக கடைபிடியுங்கள். சமூக இடைவெளிக்கு உதாரணமாக வாழுங்கள். வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆலோசனை வழங்குங்கள். அரசுக்கு முழுமையாக ஒத்துழையுங்கள். விரைவில் கொரோனா இல்லாத தமிழகம் காண உதவுங்கள்!" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.