எங்களுக்கு ஓட்டுக்கள் அதிகமாக காரணம் இது தான்., ராமதாஸ் கூறிய காரணம்!! ஸ்டாலின் அதிருப்தி!!
Ramadoss speech in krishnagiri
இன்று கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே பாமக சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ராமதாஸ், "மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், 325 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவுவது உறுதி.
ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் தான், அமேதி தொகுதி மட்டுமல்லாமல் வயநாட்டிலும் போட்டியிடுகிறார். அவரை ஸ்டாலின் பிரதமர் என அழைப்பது தான் கூத்து. ராகுலை யாரும் பிரதமராக ஏற்கவில்லை. சந்திரபாபு நாயுடு, மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் பதவி மீது ஆசைகொண்டுள்ளனர்.
ஸ்டாலின் என்னையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கண்டபடி திட்டுகிறார். திட்டட்டும் திட்டினால் எங்களுக்கு ஓட்டுகள் தான் அதிகமாகும். கலைஞருடன், திமுக கதை முடிந்தது. அரசியல் நாகரிகம் தெரியாமல் ஸ்டாலின் மேடையில் உளறுகிறார். ராகுல் காந்தி வறுமையை ஒழிப்போம் என கூறுகிறார்.
உங்களுடைய கொள்ளுத்தாத்தா நேருவும், அதையே தான் சொன்னார். உங்கள் பாட்டி இந்திரா காந்தியும், அதைத்தான் சொன்னார். உங்க அப்பா ராஜீவ் காந்தி, அம்மா சோனியா காந்தி, உங்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரை எல்லோரும் இதே வார்த்தையை தான் சொன்னார்கள்.
இப்பொழுது, நீங்களும் அதை தான் சொல்கிறீர்கள். உங்களால் வறுமையை ஒழிக்க முடியாது. ஆனால், பாமக-அதிமுக தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. விவசாய நலன் காக்கும் திட்டங்கள், எங்களது அறிக்கையில் இருக்கின்றது. அரசு ஊழியர்களுக்காக சில கோரிக்கைகள் உள்ளது. அதையும் அதிமுக நிறைவேற்றித் தரும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary
Ramadoss speech in krishnagiri