நடிகர் சூர்யாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்.!!
protest against actor surya
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார், "நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் தங்கள் தகுதியை நிரூபிக்க தேர்வெழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
சமமான வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் கல்விமுறையை சட்டமாக கொண்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வெழுத உத்தரவிடுகிறது.
தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்பது ஊடகங்களில் அன்றைய விவாதப்பொருளான மாறிவிட்டது. நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமில்லாமல் உயிரையும் பறிக்கிறது. பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது.
அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கைப்பார்க்காமல், சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுகளுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்" என்று நடிகர் சூர்யா அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. குறிப்பாக பாஜகவினர் சூர்யாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த சூர்யாவுக்கு எதிராக திருப்பூரில் இந்து முன்னணி இளைஞர்கள் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றது. நீட் தேர்வில் எங்களால் தேர்ச்சி பெற முடியாது என்றும் தமிழக மாணவர்கள் திறமையற்றவர்கள் என்று பேசிய சூர்யாவுக்கு கண்டனம் என முழக்கங்களுடன், கையில் பலகைளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நடிகர் சூர்யா படத்தை எரிக்க முயன்றதால் போராட்டக்காரர்கள், காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
protest against actor surya