ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மீண்டும் பரபரப்பான போயஸ் கார்டன்..! குவிக்கப்பட்ட போலீசார்..!
police protection for rajinikanth
சமீபத்தில் நடிகர் ரஜினி 'துக்ளக்' விழாவில் அந்த பத்திரிக்கையின் பெருமைகளை பற்றி மேடையில் பேசி இருந்தார். அதில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 1971 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெரியார் தலைமையிலான அப்போதைய ஆளும் கட்சி திமுகவின் ஆதரவோடு மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் மாநாடு என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற்றது என்று கூறினார்.
அந்தப் பேரணியில் இந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதையை ஆடைகளற்ற நிலையில், செருப்பு மாலை அணிவித்தும், சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றி செருப்பு மாலை அணிவித்து இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தினார்கள். இந்த சம்பவத்தை அந்த காலகட்டத்தில் இருந்த எந்த ஒரு பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. ஆனால் அப்போதே சோ நடத்திய 'துக்ளக்' பத்திரிக்கையில் அட்டைப்படமாக போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார் என்று ரஜினி பேசியிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி பெரியாரை இழிவு படுத்தியதாகவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தரப்பு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான் உண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது. இல்லாததை ஒன்றும் நான் சொல்லவில்லை. 1971 ம் ஆண்டு ராமர் சீதை சிலை உடையில்லாமல் கொண்டுவரப்பட்டது உண்மை தான் என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், இது மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை, மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்களால் அவருக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
இந்தநிலையில் ரஜினிகாந்த் வீடு அமைந்திருக்கும் போயஸ் கார்டனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும் அப்பகுதியில் இருக்கும் செம்மொழி பூங்காவிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் போயஸ் கார்டன் பகுதி முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் வசித்தபோது, போயஸ் கார்டனில் பல அடுக்குகளாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருப்பார்கள். இந்த நிலையில் தற்போது பெரியார் குறித்த சர்ச்சை பேச்சால் மீண்டும் போயஸ் கார்டனில் பல அடுக்குகளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
police protection for rajinikanth